சிங்கப்பூரில் கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின்கீழ் வைக்கப்பட்ட ஊழியர்களிடம் மனச்சோர்வு, மனவுளைச்சலுக்கான அறிகுறிகள் அதிகரித்ததாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பிரத்தியேக பொழுதுபோக்கு நிலையங்கள், வேலையிடம் ஆகியவற்றுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுடன் ஒப்புநோக்க, விடுதி அறைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த ஊழியர்களுக்கு அதிக மனவுளைச்சல் ஏற்பட்டது.
“கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு உதவினாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனச்சுமை கூடியது,” என்று ஆய்வு நடத்திய குழு குறிப்பிட்டது.
யேல்-என்யுஎஸ் சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஜீன் லியூ இந்த ஆய்வுக் குழுவை வழிநடத்தினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, இரு தங்குவிடுதிகளை தனிமைப்படுத்தும் இடங்களாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதில், ஏறக்குறைய 20,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது விடுதி அறைகளில் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி, விடுதிகளில் வசிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், விடுதி அறைகளைவிட்டு வெளியே செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அந்தத் தருணத்தில், 7,266 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) நிலவரப்படி, மொத்தம் 54,815 ஊழியர்களுக்குத் தொற்று உறுதியானது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெரும்பாலான தங்குவிடுதிகளில் கிருமித்தொற்றுப் பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டபோதிலும், ஊழியர்களின் நடமாட்டத்திற்கு இன்னமும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
வேலைக்குச் சென்று தங்குவிடுதிக்கு அவர்கள் திரும்ப வேண்டும். ஓய்வு நாள்களில் பிரத்தியேக பொழுதுபோக்கு நிலையங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
சிங்கப்புரில் கடந்த ஆண்டு ஜூன், அக்டோபர் மாதங்களுக்கு இடையே, உடலுழைப்பு தேவைப்படும் பணிகளில் இருந்த 1,011 வெளிநாட்டு ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மக்கள்தொகையில் மற்ற பிரிவினரைவிட வெளிநாட்டு ஊழியர்களிடம் மனநல அறிகுறிகள் அதிகம் இருப்பதற்கான ஆதாரம் எதையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.
“ஒரு பிரிவாக பார்க்கையில், வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் மீள்திறன் உடையவர்கள். அதே நேரத்தில், சிரமத்திற்கு ஆளானோர் மீது கவனம் செலுத்துவதும் முக்கியம். அதாவது, விடுதிக்குள் அடைபட்டு கிடப்பவர்கள், வேலையை இழப்பது, சுகாதாரப் பிரச்சினை அல்லது கொவிட்-19 தொற்றிவிடுமோ என்பது குறித்து அஞ்சுபவர்கள் ஆகியோருக்கு உதவ வேண்டும்,” என்று பேராசிரியர் லியூ கூறினார்.