பிள்ளைகளின் மனநலனை மேம்படுத்த உதவும் இலவசப் பயிலரங்குகள் அக்டோபர் மாதம் முதல் நடத்தப்படவுள்ளன.
உயர்நிலைப் பள்ளி பயிலும் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்களுக்காக இப்பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் 'கலர்ஸ் ஆஃப் தி மைன்ட்' திட்டத்தின்கீழ் இந்தப் பயிலரங்குகள் நடத்தப்படும்.
பிள்ளைகளின் மனநலம், சமூக மற்றும் உணர்வுரீதியான நுண்ணறிவு, மீள்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் திறன்களை இப்பயிலரங்குகள் மூலம் பெற்றோர்கள் பெறுவர் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
வயதுக்கு ஏற்ற தகவல்களும் நடவடிக்கைகளும் இப்பயிலரங்குத் திட்டத்தில் அடங்கும் என்று வாரியம் தெரிவித்தது.
ஒவ்வொரு பயிலரங்கிலும் 100 பெற்றோர் வரை கலந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
ஆரம்பக் கல்வி, மனநல ஆலோசனை, உளவியல் அல்லது சமூகச் சேவைத் துறைகளில் கல்வித் தகுதிகளை உடைய இரண்டு பயிற்றுநர்கள், பயிலரங்குகளை நடத்துவர்.
பிள்ளைகளிடம் உணர்வுகளைப் பற்றி பேசுவதன் முக்கியத்துவம், உணர்வுகளை எவ்வாறு கையாள்வது தொடர்பான வழிகாட்டுதல், தங்களையும் பெற்றோர்கள் பராமரித்துக்கொள்ள வேண்டியதன் தேவை போன்ற அம்சங்கள் பயிலரங்குகளில் இடம்பெறும்.
ஒருவர் பேச, மற்றவர்கள் கேட்டுக்கொள்ளும் பாணி, முடிந்த அளவுக்கு இந்தப் பயிலரங்குகளில் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டது.
பாத்திரமேற்று நடித்தல், குழுக் கலந்துரையாடல்கள் போன்ற அங்கங்கள் மூலம் இருவழித் தொடர்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
பள்ளிகள், சமூக பங்காளிகள் ஆகிய தரப்புகளுடன் வாரியம் இணைந்து பயிலரங்குகளை இணையத்தளங்கள் வாயிலாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, பயிலரங்குத் திட்டம் 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இரண்டு முதல் ஆறு வயதுஉடைய பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்காக தொடங்கப்பட்ட திட்டம், பின்னர் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
மாணவர்களின் மனநலம் அண்மையில் பெரிதும் பேசப்படும் ஒன்றாகிவிட்டது.
கடந்த மாதம் 13 வயது ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி மாணவரை 16 வயது மாணவர் தாக்கிக் கொன்ற சம்பவம் பலரையும் பாதித்தது.
தற்போது அந்த 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மனநல மதிப்பீட்டுக்காக அந்த மாணவர் தடுப்புக் காவலில் உள்ளார்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்
பதற்கு சமூக அளவிலான ஒரு முயற்சி தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருந்தார்.
மனநலப் பிரச்சினைகளுடன் தவிக்கும் இளையர்களுக்கு, தங்களின் பெற்றோர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் அடிக்கடி ஏற்படுவது உண்டு.
தங்களின் பிள்ளையினது கல்வி அல்லது வேலை தொடர்பான வாய்ப்புகளுக்கு இதுபோன்ற மனநல விவகாரங்கள் களங்கமாக இருக்கலாம் என்று சில பெற்றோர்நினைப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

