முன்னோடித் திட்டமாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் டாக்சி ஒட்டுநர்களுக்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் உணவு, மளிகைப் பொருள் விநியோக அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று அறிவித்த போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், நோய்த்தொற்றால் ஓட்டுநர்களின் வருவாய் பாதிப்படைந்துள்ளதாகவும் இவ்வனுமதி ஓட்டுநர்களுக்குக் கூடுதல் வருவாயை ஈட்டித் தரும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய விதிமுறைகளின் கீழ், டாக்சி ஒட்டுநர்களுக்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் இதுபோன்ற விநியோக சேவை வழங்கும் அனுமதியில்லை.
உணவு, மளிகைப் பொருள்களில் விநியோக சேவையின் தேவை அதிகரித்திருக்கும் சூழலில், இந்த அனுமதியால் வாடிக்கையாளர்களும் கடைக்காரர்களும் பயனடைகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த முன்னோடித் திட்டத்தின் துவக்கத்திலிருந்து ஏறத்தாழ 17,500 டாக்சி ஓட்டுநர்களும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களும் விநியோக சேவை வழிங்கியுள்ளனர். என்றும் அவர் குறிப்பிட்டார்.
விநியோக ஊழியர்களுக்கான வேலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக நேற்று முன்தினம் பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார். பிரதமர் விநியோக ஊழியர்களை மட்டும் குறிப்பிட்டபோதிலும், டாக்சி ஓட்டுநர்களும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களும் அதில் உள்ளடங்குவர் என்றும் அவர் கூறினார்.
தங்களது முத்தரப்பு பங்காளிகளுடன் டாக்சி ஒட்டுநர்கள் மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுடைய நலனின் மேம்பாடு குறித்து தாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் திருவாட்டி ஏமி கோர் கூறினார்.

