பாலியல் ரீதியாக சிறு பிள்ளைகளைக் குறிவைப்பவர் என்று அடையாளம் காணப்பட்ட ஆடவர் ஒருவர், தனது வளர்ப்பு மகளைச் சீரழித்ததற்காக சிறைக்குச் சென்றார். அப்போது அவருக்கு 19 ஆண்டு சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. 2013ல் அவர் விடுதலையானதை அடுத்து தன் அக்காவின் வீட்டில் தங்கினார். அதே வீட்டில் அந்த அக்காவின் பேரப்பிள்ளைகளும் வசித்து வந்தனர்.
மூன்று ஆண்டுகளில் மீண்டும் தன் தீய செயலில் ஈடுபட்டார் அந்த ஆடவர். 9, 11 வயதுகளுடைய அந்தச் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் இளையவர், வீடு திரும்பாமல் பின்னர் போலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, ஆடவர் செய்த குற்றம் அம்பலமானது.
தற்போது 60 வயதுடைய அந்த ஆடவர், தன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார்.
ஆடவரின் துன்புறுத்தலுக்கு ஆளான இரண்டு சிறுமிகளுக்கும் தற்போது 13, 16 வயது. இருவரின் அடையாளத்தைக் காக்க, ஆடவரின் பெயரும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், மனநல அறிக்கை ஒன்றில், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மூலம் ஆடவர் பலனடையலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆடவரின் தண்டனை விதிப்பு பின்னாளில் தெரிவிக்கப்படும்.