அனைத்துலக நிதி, உற்பத்தி மையமாகத் திகழ்வதை சிங்கப்பூர் உறுதிசெய்துகொள்ளும் அதே வேளையில், வெளிநாட்டவருடன் வேலைக்காகப் போட்டிபோடும் சிங்கப்பூரர்களிடையே காணப்படும் கசப்புணர்வையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
சிங்கப்பூருக்குத் தாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டையும் தனிப்பட்ட முறையில் பின்பற்றி வரும் நடுநிலையான வேலை நியமன வழக்கங்களையும் உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்கள், தொழிற்சபைகள், வர்த்தகச் சங்கங்கள், நிபுணர்கள் ஆகிய வெவ்வேறு தரப்புகள் மறுஉறுதிப்படுத்திக்கொண்ட போதும், வேலைவாய்ப்புத் தொடர்பான இப்புதிய நடைமுறைகளால் வெளிநாட்டுத் திறனாளர்களை நாட்டுக்குள் புகாமல் செய்துவிடக்கூடாது என்பதையும் வலியுறுத்தினர்.
எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ்-பாஸ் ஆகியவற்றுக்கான தகுதி அடிப்படை கடுமையாக்கப்படும் நிலையில், கூடுதல் சம்பளத்திற்கான வரம்பும் ஏற்படுகிறது. வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்குச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, மற்ற நாடுகளின் கொள்கைகளுக்கு ஒத்திருப்பதாக வர்த்தகத் தலைவர்கள் கூறினர். இருப்பினும், மேல்நிலைத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் சிங்கப்பூரின் மக்கள்தொகையையும் வைத்துப் பார்க்கும்போது, திறன் அடிப்படையில் ஏற்படக்கூடிய சில குறைபாடுகளைச் சரிசெய்ய வெளிநாட்டுத் திறனாளிகள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

