தஞ்சோங் பகாரில் உள்ள 'இன்டர்நேஷனல் பிளாசா' ஒட்டுமொத்த விற்பனைத் திட்டத்தின் கீழ் விற்பனைக்கு வந்துள்ளது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஒருங்கிணைந்த கட்டடமான 'இன்டர்நேஷனல் பிளாசா'வை ஜூலை ஏழாம் தேதி 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பங்குதாரர்கள் விற்க முடிவெடுத்தனர்.
இதன்படி குறைந்தபட்சத் தொகையான $2.7 பில்லியனுக்குப் பொது ஏலக்குத்தகை மூலம் வாங்க விரும்புவோர் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
ஒட்டுமொத்த விற்பனைத் திட்டத்தின் கீழ் வரும் ஆக பெரிய விற்பனையாகும்.
1970ல் கட்டப்பட்ட 'இன்டர்நேஷனல் பிளாசா'வில் 209 குடியிருப்புகளும் 559 அலுவலங்களும் 192 கடைகளும் ஒரு வாகன நிறுத்துமிடமும் ஒரு நீச்சல் குளமும் உள்ளன. வர்த்தக பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 'இன்டர்நேஷனல் பிளாசா' 0.7 ஹெக்டர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இதன் குத்தகைக் காலத்தில் இன்னும் 48 ஆண்டுகள் எஞ்சியுள்ளன. ஒட்டுமொத்த விற்பனைக்கான தொடக்கப் பணி 2019ஆம் ஆண்டு தொடங்கிய போதும் கொள்ளைநோய் பரவல் காரணமாகத் தள்ளிப்போடப்பட்டது.
இதனால் 'இன்டர்நேஷனல் பிளாசா' சட்ட அமைச்சிடமிருந்து விற்பனைக் காலத்துக்கு நீட்டிப்பு பெற்றது.
ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் நவம்பர் 30ஆம் தேதி மதியம் மூன்று மணி.

