ஜோகூர் பாரு: வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ஜோகூரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதும் சிங்கப்பூரில் இருக்கும் மலேசியர்கள் சிலர் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்லத் தயங்குகின்றனர்.
“என் மனைவி, பிள்ளைகளைக் காண வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், மலேசியாவிற்குத் திரும்ப செல்லும் திட்டத்தை இப்போதைக்கு ஒத்திவைப்பதே நல்லது,” என்றார் 32 வயது அஸிஸான் அகமது.
கிருமிப் பரவல் அதிகரிப்பது கவலையளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பும் மலேசியர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதித்த அரசின் முடிவை வரவேற்றுள்ள இவர், “அதிகரித்து வரும் கிருமித் தொற்று சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பயணக் கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் என்னால் சிங்கப்பூருக்கு மீண்டும் வேலைக்கு வரமுடியாமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது,” என்றார்.
இவரைப் போலவே வேலை பயிற்றுவிப்பாளரான டான் ஷோ ஹுய், ஜோகூருக்குத் திரும்பும் தனது பயணத் திட்டத்தை இப்போதைக்கு ஒத்திவைத்துள்ளார்.
“சிங்கப்பூருக்குத் திரும்பும்போது தனிமைப்படுத்தலுக்கான கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், மலேசியாவிற்குச் செல்லும் எந்தத் திட்டமும் இப்போதைக்கு இல்லை,” என்றார் அவர்.
அதோடு ஜோகூரில் இல்லத் தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட சில நிபந்தனைகள் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
ஜோகூரில் இருக்கும் 30 வயது கெல்வின் ஜான் பேரியும், சிங்கப்பூரில் வேலை செய்யும் தனது மனைவியைக் காண்பதற்காக சிங்கப்பூர் வரவுள்ளதாகச் சொன்னார். இதற்காக தான் சிங்கப்பூரில் வேலை தேடி வருவதாகவும் அவர் சொன்னார்.