சிங்கப்பூர் அதன் பொருளியலை மறுசீரமைத்து வரும் நிலையில், பத்து முக்கிய துறைகளில் பணி
புரிய விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் ஊடகம், நிதிச் சேவைகள், கணக்கியல், உற்பத்தி, சுகாதாரப் பராமரிப்பு, மொத்த வியாபாரம், தளவாடம், உணவுச் சேவைகள், சில்லறை வர்த்தகம், சுற்றுப்புறத் திட்டமிடல் ஆகிய துறைகளில் சிங்கப்பூரர்களுக்கு வேலை கிடைக்க உதவிக்கரம் நீட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவுக்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தலைமை தாங்குகிறார்.
மூன்று பிரிவுகளில் பணிக்குழு கவனம் செலுத்தும் என்றார் அவர்.
இந்த 10 முக்கிய துறைகளுக்கு மாற விரும்பும் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்பது, இத்துறைகளில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த உதவுவது, மேம்படுத்தப்பட்ட மனிதவள அணுகுமுறைகளை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்குப் பணிக்குழு முக்கியத்துவம் கொடுக்கும்.
தொழில்துறையும் ஊழியரணி உருமாற்றமும் நெருங்கிய தொடர்புடையவை என்று வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான் கூறினார்.
நிறுவனங்கள் உருமாறிவரும் நிலையில், செயல்முறைகளும் திறன்களும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
தொழில்துறைக்கு ஏற்ப ஊழியரணியும் மாற வேண்டும் என்று அமைச்சர் டான் வலியுறுத்தினார்.
இந்தப் பத்து முக்கிய துறைகளில் சிங்கப்பூர் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பல்வேறு அமைப்புகளுடன் பணிக்குழு இணைந்து செயல்படும்.
சிங்கப்பூரர்களைக் கொண்ட வலுவான ஊழியரணி உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் நிறைவேற மனிதவள அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
தொழிற்சங்கங்கள், முதலாளிகள் போன்ற முத்தரப்புப் பங்காளிகளுடன் இவை ஒன்றிணைந்து செயல்படும்.
பத்து முக்கிய துறைகளில் இருப்பில் உள்ள வேலைகளைப் பற்றி சிங்கப்பூர் ஊழியர்களுக்குப் புரிய வைக்க பணிக்குழு இலக்கு கொண்டுள்ளதாக டாக்டர் டான் தெரிவித்தார்.
இந்த வேலைகளில் சேர தேவையான திறன்களைப் பற்றி சிங்கப்பூர் ஊழியர்கள் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
பொருளியல் உருமாற்றத்தில் சிங்கப்பூர் முழுவீச்சுடன் செயல்பட்டு வரும் நிலையில், வேலை கிடைப்பதில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
புதிய வேலைகளுக்குத் தேவையான திறன்கள் இல்லாத காரணத்தால் வேலை கிடைப்பதில் சிலருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைச் சரிசெய்ய பணிக்குழு வழிவகைகளைக் கண்டுபிடிக்கும் என்று அமைச்சர் டான் உறுதி அளித்தார்.

