பொதுமக்கள் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக்கொள்ளும் தானியக்க இயந்திர மனிதர்கள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இவை, தோ பாயோ சென்ட்ரல் பகுதியில் மூன்று வாரங்களுக்குச் சோதனையிடப்படும்.
சட்டவிரோதமாக உணவங்காடிக் கடைகளை நடத்துவோர், தவறான இடங்களில் புகைபிடிப்போர், நடைபாதைகளில் மோட்டார்சைக்கிகளையோ மின்ஸ்கூட்டர்களையோ ஓட்டுவோர், விதிக்கப்பட்டதற்கு மேல் அதிகமான எண்ணிக்கையில் ஒன்றுகூடுவோர் உள்ளிட்டோரை இரண்டு இயந்திர மனிதர்கள் அடையாளம் காணும்.
எல்லா திசைகளிலும் படமெடுக்கக்கூடிய கேமராக்கள் இயந்திர மனிதர்களில் பொறுத்தப்பட்டுள்ளன. அவற்றால் இருட்டிலும் படமெடுக்கமுடியும். விதிமுறைகளை மீறாமல் இருக்குமாறு மக்களுக்கு எடுத்துச்சொல்லும் குறிப்புகளையும் இது காட்டும்.
அதிக ஆள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் தானியக்கக் கருவியைக் கொண்டு கண்காணிப்பது இதுவே முதல் முறை. பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவது இதன் இலக்கு.
தேசிய சுற்றுப்புற வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம், உள்துறை குழுவின் அறிவியல் பிரிவு உள்ளிட்ட ஐந்து அமைப்புகள் இத்திட்டத்தை நடத்துகின்றன. தேசிய தின அணிவகுப்பு போன்ற பெரிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் தானியக்க இயந்திர மனிதர்களைப் போல் இவை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சேவியர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதனில் உள்ள கேமராக்களில் பதிவாகும் படங்களும் காணொளிகளும் கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படும். அங்கு அதிகாரிகளால் பல இயந்திர மனிதர்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கமுடியும். தவறான செயல்களைக் கண்டறியும் இயந்திர மனிதனின் ஆற்றலைப் பற்றித் தெரிந்துகொண்டு அதில் இருக்கக்கூடிய குறைபாடுகளைச் சரிசெய்ய போதுமான தகவல்களைச் சேகரிப்பதே இந்த மூன்று வாரச் சோதனையின் நோக்கம்.
சோதனை கட்டத்தின்போது, குறிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் இந்த இயந்திர மனிதர்கள் அதிகம் பயன்படுத்தப்படுமே தவிர, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இவை அதிகம் ஈடுபடமாட்டா எனத் தெரிவிக்கப்பட்டது. சேவியர் இயந்திர மனிதர்களால் மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் செல்லமுடியும்.

