சிங்கப்பூர் அரசாங்கம் 100,000க்கு மேல் போடக்கூடிய ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்துகளை மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கு வழங்கும் என்று அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் ஹஸ்னி முகம்மது தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஜோகூர் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த திரு ஹஸ்னி, "ஜோகூர் மாநில அரசாங்கத்துக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நல்லுறவின் அடிப்படையில், சிங்கப்பூர் இவ்வாண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி 20,000 தடவை போடக்கூடிய சினோவேக் தடுப்பூசி மருந்துகளை ஜோகூருக்கு வழங்கியது.
"விரைவில் சிங்கப்பூர் அரசாங்கம் 100,640 தடவை போடக்கூடிய ஃபைசர் தடுப்பூசி மருந்துகளை ஜோகூர் அரசாங்கத்துக்கு வழங்கும்.
"இதைத் தவிர, ஐக்கிய அரபு சிற்றரசுகள் அரசாங்கம் வழங்கிய 300,000 தடவை போடக்கூடிய சைனோஃபார்ம் தடுப்பூசி மருந்துகளை ஜோகூர் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது," என்றும் விவரித்தார்.
தடுப்பூசி மருந்துகளை மற்ற நாடுகளிடமிருந்து பெறும் முயற்சியில் பங்காற்றிய மலேசியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசேனுக்கு திரு ஹஸ்னி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
திரு ஹிஷாமுதின், தற்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராகப் பணியாற்றுகிறார்.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடும் தேசிய திட்டத்தில், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து இதுவரை 4.7 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை ஜோகூர் பெற்றிருப்பதாகவும் அவற்றில் 2.4 மில்லியன் தடவை போடக்கூடிய ஃபைசர், 1.8 மில்லியன் தடவை போடக்கூடிய சினிவேக், 410,750 தடவை போடக்கூடிய ஆஸ்ட்ராஸெனக்கா தடுப்பூசி மருந்துகள் என்றும் திரு ஹஸ்னி பட்டியலிட்டார்.
"நோய்த்தொற்றிலிருந்து விடுபட தடுப்பூசி போடுவது எங்களது முக்கிய உத்திகளுள் ஒன்று. அந்த அடிப்படையில் ஜோகூர் மாநில அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 விழுக்காட்டினர் இம்மாதம் 16ஆம் தேதிக்குள் ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதையும், அடுத்த மாதம் மூன்றாம் வாரத்துக்குள் அதே விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது," என்றும் திரு ஹஸ்னி கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஜோகூரில் பெரியவர்களில் 53.5 விழுக்காட்டினர் முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளனர்.

