புக்கிட் மேரா வியூ ஈரச்சந்தை, உணவங்காடியில் கடந்த ஜூன் மாதத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டோரிடையே மூன்று அம்சங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, முகக்கவசங்களைச் சரியாக அணியவில்லை, பழங்களையும் காய்கறிகளையும் கைகளால் அதிகம் தொட்டுப் பார்த்திருக்கின்றனர்.
புக்கிட் மேரா வியூ ஈரச்சந்தை, உணவங்காடியில் உருவான கொவிட்-19 குழுமம் தொடர்பில் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.
இந்தக் குழுமத்தில் மொத்தம் 94 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இங்கிருந்த அனைத்து 182 கடைகளும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன. அவ்வேளையில் இதுவே சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த சில வீடமைப்பு புளோக்குகளிலும் சிறிய குழுமங்கள் உருவாயின. 200,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடையே சுகாதார அமைச்சு பல முறை கொவிட்-19 பரிசோதனைகளை நடத்தியது.
ஆய்வின் ஓர் அங்கமாக, கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட புக்கிட் மேரா வியூ ஈரச்சந்தையும் உணவங்காடியும் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டோருடன் ஆய்வாளர்கள் பேசியதாக தேசிய பொதுச் சுகாதார, தொற்றுநோயியல் பிரிவின் இணைப் பேராசிரியர் மத்தாயஸ் டோ கூறினார். மூத்தோர் பலர் இந்தப் பகுதிக்கு அதிகம் செல்வதுண்டு.
கிருமிப் பரவலால் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் புக்கிட் மேரா வியூ கொவிட்-19 குழுமத்தைக் குறிவைத்து ஆய்வு நடத்தியதாகத் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் லியோ யீ சின் தெரிவித்தார்.
புக்கிட் மேரா வியூ கடைக்காரர்கள் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பது குறித்து ஆலோசிக்கலாம் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கைச் சுத்திகரிப்பானைக் கொண்டு செல்லலாம்.
பழங்களையும் காய்கறிகளையும் தொடுவதற்கு முன்னும் பின்னும் சுத்திகரிப்பானால் கைகளைச் சுத்தம் செய்துகொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.