இடமாற்றம் செய்யப்படும் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் புதிய முதலாளிகள் இல்லத் தனிமை உத்தரவு, கொவிட்-19 தொடர்பான பரிசோதனைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை பழைய முதலாளிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.
வேலையில் சேர்ந்து 12 மாதங்களுக்குள் பணிப்பெண் இடமாற்றம் செய்யப்பட்டால் இந்தப் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.
அந்த 12 மாதங்களில் அப்பணிப்பெண் தமக்கு எவ்வளவு நாட்கள் வேலை செய்தார் என்பதைப் பொறுத்து, அதன்படி செலவை பழைய முதலாளி ஏற்க வேண்டும்.
உதாராணத்துக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகு பணிப்பெண் இடமாற்றம் செய்யப்பட்டால் செலவுகளை புதிய முதலாளியும் பழைய முதலாளியும் சரிபாதியாகப் பிரித்துகொள்ள வேண்டும்.
செலவைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக பழைய முதலாளிக்கும் புதிய முதலாளிக்கும் பணிப்பெண் முகவைகள் உதவ வேண்டும் என்று அமைச்சு கூறியது.
செலவுப் பகிர்வுக்குத் தகுதி பெற மூன்று நிபந்தனைகளை மனிதவள அமைச்சு முன்வைத்துள்ளது.
வீட்டிலேயே இருக்கும் உத்தரவை நிறைவேற்றியதும் 12 மாதத்துக்குள் பணிப்பெண் இடமாற்றம் செய்யப்பட்டால் புதிய முதலாளியும் பழைய முதலாளியும் செலவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இல்லத் தனிமை உத்தரவு, கொவிட்-19 தொடர்பான பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட செலவைவிட அதிகமாக பழைய முதலாளிகள் கேட்கக்கூடாது.
செலவைப் பகிர்ந்துகொள்வது குறித்து இருதரப்பினரும் கைப்பட எழுதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, வெளிநாட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கும் முதலாளிகள் முழு செலவையும் ஏற்க வேண்டும்.
ஆனால் தற்போது இல்லத் தனிமை உத்தரவு தொடர்பான கட்டணங்களை முதலாளிகள் முன்கூட்டியே செலுத்த வேண்டி இருப்பதால் ஒப்பந்தம் காலத்துக்கு முன்பே பணிப்பெண் இடமாற்றம் செய்யப்பட்டால் அது அவர்களுக்கு நியாயமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.