தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் இயற்றப்படுவதைப் பற்றி அறிவித்திருந்தார்.
சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து கட்டிக்காக்க ஒருபுறம் சட்டம் தேவையென்றாலும் அதற்கும் மேலாக சமுதாய பண்புகள், நட்புறவு, புரிந்துணர்வு போன்ற அம்சங்களில் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் திரு எஸ்.ஈஸ்வரன் கூறினார்.
மக்கள் கழக நற்பணி பேரவையின் ஏற்பாட்டில் தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்திய கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மெய்நிகர் கலந்துரையாடலில் அடித்தளத் தலைவர்கள், நற்பணி பேரவை தொண்டூழியர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் என சுமார் 200 பேர் நேற்று முன்தினம் கலந்துகொண்டனர்.
இனவாதம், இனப் பாகுபாடு, வேலையிடத்தில் தலையங்கி அணிவதற்கு அனுமதி, குறைந்த வருமான ஊழியர்களுக்கு ஆதரவு, நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல், சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் வேலை வாய்ப்புச் சவால்கள் போன்ற விவகாரங்கள் இந்த இரண்டு மணி நேர கலந்துரையாடலில் பேசப்பட்டன.
இனப் பாகுபாடு சம்பவங்கள் நிகழும்போது அவற்றை எப்படிக் கையாள்வது என்ற கேள்வி கலந்துரையாடலில் கேட்கப்பட்டது.
"சிங்கப்பூரில் சீன இனத்தவருக்கு சிறப்புரிமைகள் உள்ளதா என்ற கேள்விக்கு வேறுபட்ட பதில்கள் கிடைக்கும்.
மூத்த தலைமுறையினர் அவ்வாறு இல்லை என்று பதிலளிப்பர். ஏனெனில் பெரும்பான்மையினர் சீனர்களாக இருந்தாலும் அன்று அவர்கள் ஆங்கில மொழியைக் கற்க வேண்டி இருந்தது.
இளைய தலைமுறையினரிடமும் சிறுபான்மையினரிடமும் இதைப் பற்றி கேட்டால், பெரும்பான்மையினருக்கு சிறப்புரிமைகள் உள்ளதென்பர், இதில் அவர்கள் தங்களது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர்.
சமுதாயத்தின் கலாசார பண்பு நெறிகளுக்கு இணங்க நம்மை எப்படி மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அனைவரும் தங்களது கலாசார அடையாளத்தைக் கட்டிக்காக்க முடிகிறது. அதே வேளையில் இதை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சிங்கப்பூர் என்ற பல்லின நாட்டில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு," என்ற விளக்கம் இக்கேள்விக்கு தெரிவிக்கப்பட்டது.
சிலரின் தகாத நடத்தையால் இதுவரை சிங்கப்பூர் கட்டிக்காத்து வந்த இன நல்லிணக்கத்திற்கு களங்கம் விளைவித்திட சந்தரப்பம் கொடுக்கக்கூடாது என்றும் கல ந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
வேலையிட இனப் பாகுபாடு குறித்து நியாயமான வேலை நடைமுறைகள் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் வேலைக்கான மொழி தேவைகள் இனப் பாரபட்சத்திற்கு இடம்கொடுக்காது உண்மையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கலந்துரையாடலில் கூறப்பட்டது.
இனம் தொடர்பான கேள்விகளுக்கு அப்பால், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்களது உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் $1,400 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பின் தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதன் தொடர்பில், லிட்டில் இந்திய வர்த்தகர்கள் வேலைக்கு ஆள் சேர்ப்பதில் சவால்களை எதிர்கொள்வதாகவும் அங்குள்ள சில்லறை வர்த்தக கடைகளில் வேலை செய்ய உள்ளூர்வாசிகள் முன்வருவதில்லை என்பதும் கலந்துரையாடலில் கூறப்பட்டது.
அதற்கு சம்பள உயர்வால் வியாபாரத்தை நடத்தும் செலவு அதிகரிப்பது இன்றியமையாதது என்றும் புதிய விதிமுறை நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு நியாயமன சம்பளத்தை தருவதே அதன் நோக்கமாகும் என்றும் விளக்கப்பட்டது.
"கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில், பேரவையின் திட்டங்களை மெய்நிகர் பாணியில் வழி நடத்தினோம்.
"இந்து அறக்கட்டளை வாரியத்துடன் இணைந்து மதிய உணவைக் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினோம். கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் ரத்துசெய்யப்பட்ட சில நடவடிக்கைகள் மீண்டும் தொடரும்," என்று தெரிவித்தார் மக்கள் கழக நற்பணி பேரவையின் தலைவர் திரு கி. ராமமூர்த்தி.