தன்னிடம் படித்த ஒரு மாணவன் தூங்கியபோது அந்தப் பையனை மானபங்கம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 2½ ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆசிரியர், அந்தப் பையனைத் தன்னுடைய வளர்ப்பு மகனாக பாவித்து இருந்தார். ஆனால் அவரே பிறகு மாணபங்கம் செய்தார். அந்த 36 வயது குற்றவாளிக்கு மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.
அந்த ஆசிரியர் மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றவாளி என்று முன்னதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அந்த ஆசிரியர், அந்த மாணவர், பள்ளிக்கூடம் ஆகியவற்றின் பெயர்களைத் தெரிவிக்க தடை உள்ளது.
குற்றவாளியான ஆசிரியர் 2017 முதல் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அவர் இப்போது எந்தப் பள்ளிக்கூடத்திலும் வேலை பார்க்கவில்லை.
பள்ளியில் தன்னிடம் தொடக்கப்பள்ளி 6 ஆம் வகுப்பு படித்த அந்த மாணவனுக்கு 2016ல் ஆங்கிலம் கணிதம், அறிவியல் பாடங்கள் போதித்த அந்த ஆசிரியர், தந்தையை இழந்த அந்தப் பையனின் வீட்டுக்குச் சென்று தந்தைபோல் பல உதவிகளைச் செய்து வந்ததாக விசாரணையில் கூறப்பட்டது.
தந்தையைப் போல் தன் மீது கருணை காட்டிய அந்த ஆசிரியரை அந்தப் பையனும் தன் தந்தையாகவே கருதினார்.
ஆனால் 2017 ஜூன் 5ஆம் தேதி பையனிடம் தகாத முறையில் அந்த ஆசிரியர் நடந்து கொண்டார். அடுத்த நாளும் அதேபோல் முயற்சி செய்தார். அது பற்றி அந்தப் பையன், தன் தாயாரிடம் தெரிவித்து போலிசிடம் புகார் செய்யப்போவதாகக் கூறினார். ஆனால் அப்படி செய்யவேண்டாம் என்று மாணவரின் தாயார் அவரைத் தடுத்துவிட்டார்.
பிறகு பள்ளிக்கூட ஆலோசனை அதிகாரியிடம் அந்த மாணவர் அது பற்றி தெரிவித்ததை அடுத்து இந்த விவகாரம் போலிசிடம் சென்றது என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.