சிங்கப்பூரில் ஆகஸ்ட் 23க்கு பிறகு தொற்று பெருகி உள்ளது.
அது மேலும் மூன்று மடங்கு கூடி பிறகு குறைந்து, நிலைப்படும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரி வித்தார்.
மடங்கு மடங்காகப் பெருகி தொற்று எண்ணிக்கை 3,200க்குக் கூடுவதைத் தவிர்த்துக்கொள்ள மக்கள் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு ஓங், நேற்று மெய்நிகர் செய்தியாளர் மாநாட்டில் பேசினார்.
அதிக தடுப்பூசி போட்டுள்ள நாடுகளின் அனுபவத்தைப் பார்க்கையில், தொற்று பொதுவாக 30 முதல் 40 நாட்களில் உச்சத்தை எட்டுகிறது. அதன் பிறகு அது குறையத் தொடங்குகிறது என்பது தெரிகிறது.
அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு முறை தொற்று இரண்டு மடங்காகக் கூட வாய்ப்பு இருக்கிறது.
இதை வைத்துப் பார்க்கையில் சிங்கப்பூர் நான்கு அல்லது ஐந்து மடங்கு தொற்றுப் பெருக்கத்தைச் சமாளிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
இப்போது 400லிருந்து 800 ஆக நாள் ஒன்றுக்கு இரண்டு மடங்காகும் நிலை இருக்கிறது.
இதற்குப் பிறகும் இரு முறை மடங்கு மடங்காகத் தொற்று கூடும் என்று வைத்துக்கொண்டால், அன்றாட தொற்று எண்ணிக்கை 800லிருந்து 1,600 ஆக, 1,600லிருந்து 3,200 ஆக உயரக்கூடும். அதற்குப் பிறகு அது குறையக்கூடும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இப்படி நிகழுமா, நிகழாதா என்பது நம் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பொறுத்தே இருக்கும் என்று அவர் கூறினார்.