சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செயல்திட்டம் இம்மாதம் 14ஆம் தேதி தொடங்குகிறது.
அந்தச் செயல்திட்டம் 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியவர்களுக்கு உரியதாக இருக்கும்.
முதியவர்களுக்கான பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்தவர்களையும் அந்தத் திட்டம் உள்ளடக்கும் என்று நேற்று சுகாதார அமைச்சு அறிவித்தது.
புற்றுநோய் முதலான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கலாம். அல்லது அறவே இல்லாமல் போகலாம். இத்தகையோரும் அந்தச் செயல்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சு மேலும் கூறியது.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டிருக்கும் முதியவர்கள், பூஸ்டர் ஊசியைப் போட்டுக்கொள்ள அழைக்கப்படுவார்கள்.
அவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று அறிக்கை ஒன்றில் அமைச்சு குறிப்பிட்டது.
அவர்கள் www.vaccine.gov.sg. என்ற இணையத்தளம் மூலம் புதிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
குறுஞ்செய்தி வரும்போது பூஸ்டர் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ளும்படி தகுதி உள்ள முதியவர்களை நேற்று நடந்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டதற்கு ஆறு முதல் ஒன்பது மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியை முதியவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அண்மையில் கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர்கள் குழு பரிந்துரைத்து இருந்தது.
பூஸ்டர் தடுப்பூசி ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கும்.
கடுமையான நோயிலிருந்து அதிக பாதுகாப்பை நீண்ட நெடுங்காலத்திற்கு அது கொடுக்கும் என்று அந்தக் குழு தெரிவித்தது.
நோய் தடுப்பாற்றல் போதிய அளவுக்கு இல்லாதவர்கள் கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
இருந்தாலும் அவர்கள் தங்களுக்குச் சிகிச்சை வழங்கும் வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து அதற்குப் பிறகு இதைச் செய்ய வேண்டும்.
நடுத்தர வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசியைப் போடும் சாத்தியம் பற்றி ஆராயப்பட்டு வருவதாக கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.