சிங்கப்பூரின் சட்டங்கள் ஒருவர் தீவிரவாதச் சிந்தனைக்கு மாறும்போது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் நியூசிலாந்தில் ஏற்பட்ட கத்திக்குத்து போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களையும் தடுக்கவும் உதவியுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.
தாக்குதல்களை நடத்த யோசிப்போரை அல்லது திட்டமிடுவோரை ஆரம்பகட்ட நிலையிலேயே தடுத்து வைக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் உதவுவதை திரு சண்முகம் சுட்டினார். தீவிரவாதச் சிந்தனை மறுவாழ்வு பெறவும் அது உதவுகிறது என்றார் அமைச்சர்.
செய்தியாளர்களிடம் நேற்று பேசிய திரு சண்முகம், அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் பல உலகநாடுகளில் மோசமான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
பயங்கரவாதத்தைச் சமாளிக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன என்ற திரு சண்முகம், இங்கு தீவிரவாதச் சிந்தனைக்கு மாறும் சில சம்பவங்களைச் சமாளிக்க சில முக்கிய அடிப்படை அம்சங்கள் சிங்கப்பூருக்கு உதவுவதாகச் சொன்னார்.
நல்ல உளவுத் தகவல்கள், வன்முறை போக்குக் கொண்ட தீவிரவாதத்தை சற்றும் ஏற்றுக்கொள்ளாதது, சமயங்களுக்கு இடையே வலுவான உறவைக் கொண்டிருப்பது ஆகியவற்றையும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் தீவிரவாதி ஒருவர் ஒரு பேரங்காடிக் கடையில் குறைந்தது ஆறு பேரைக் கத்தியால் குத்திய சம்பவத்தைப் பற்றியும் திரு சண்முகம் பேசினார்.
அந் நபரை ஐந்தாண்டுகளாக அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பல முறை கைது செய்யப்பட்ட அவர், இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் வேறு குற்றங்களுக்காக காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்நபர் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவது கத்திகளை வாங்குவது பற்றியும் இணையத்தில் தேடி வந்தார்.
இந்த அறிகுறிகள் இருந்தபோதும் நியூசிலாந்து சட்டங் களின்படி அவரைக் கைது செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சுட்டினார். சிங்கப்பூரில் இது நடந்திருக்காது என்ற அவர், நியூசிலாந்து அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது பற்றி பரிசீலித்து வருகிறது என்றார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி குறிப்பிட்ட திரு சண் முகம், பயங்கரவாதக் குழுக்கள் பயிற்சி அளிக்கவும் ஆயுதங்களைப் பெறவும் அந்நாடு இடம் அளிக்கும் என்று பல நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் கவலைப்படுவதாகக் கூறினார்.
ஆப்கான் நிலவரத்தால் உடனடி ஆபத்து இல்லை என்றாலும் இது இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் தயாராக வேண்டிய விவகாரம் என்றார் அவர்.

