கட்டுமான நிறுவனமான சேம்வோ மீது பொதுப் பயனீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. அனுமதி வழங்கப்படாத கால்வாய் பணிகளை மேற்கொண்டதால் பாசிர் ரிஸ் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.
சென்ற மாதம் 20ஆம் தேதியன்று தெம்பனிஸ் அவென்யூ 10, பாசிர் ரிஸ் ட்ரைவ் 12 ஆகிய இரண்டு சாலைகளின் சந்திப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்களும் மோட்டர்சைக்கிள்களும் சிக்கின. அப்பகுதியில் பொதுவாக வெள்ளம் ஏற்படுவதில்லை. ஆனால் சேம்வோவின் செயலால் அங்கு வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடை, வடிகால் சட்டத்தின்கீழ் பொதுப் பயனீட்டுக் கழகம் சேம்வோ மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யும். கனமழை, புயல் நீரைச் சேகரிக்கும் கால்வாய் கட்டமைப்பைப் பாதிக்கும் செயல்களை மேற்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம். அனுமதியின்றி கால்வாய் கட்டமைப்பை மாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட சாலைச் சந்திப்பின் 200 மீட்டர் நீளம்கொண்ட பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 13 வாகனங்கள் நீரில் பாதி மூழ்கின. தங்களின் மோட்டார்சைக்கிள்களை வெளியேற்ற பல ஓட்டுநர்களுக்கு உதவி தேவைப்பட்டது. குறைந்தது ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பொதுவாக சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்பட்டால் நீர் சுமார் அரை மணிநேரத்திற்குள் வடிந்துவிடும். ஆனால் இந்தப் பிரச்சினை சுமார் இரண்டு மணிநேரத்திற்கு நீடித்தது.
அன்று பெய்த மழை நீரின் அளவைத் தாங்கக்கூடிய ஆற்றல் கால்வாய் கட்டமைப்பிற்கு இருந்ததாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
அதில் சேகரிக்கப்படும் நீர், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்கை அப்பி அப்பி கால்வாய்க்குச் செல்லும். ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று நீரின் அளவு 50 விழுக்காடாகத்தான் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உணர்க்கருவிகளின் மூலம் அந்த விவரங்கள் தெரியவந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதியிலும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதியிலும் இதே அளவு மழை பொழிந்ததாகவும் அவ்விரு நாட்களிலும் வெள்ளம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

