தொற்றுக் குழுமம் உருவானதன் காரணமாக சைனாடவுன் காம்ப்ளக்ஸ் பொதுமக்களுக்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் மூடப்பட்டது. புதன்கிழமை இரவு 11.59 மணிவரை அது மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சைனாடவுன் காம்பிளக்ஸ் வளாகத்தில் தலைகாட்டிய கொவிட்-19 தொற்றுக் குழுமத்தில் மொத்தம் 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கு ஏற்பட்ட தொற்றுக்குழுமத்துடன் தொடர்புடைய 66 பேரில் 63 பேர் அங்கு வேலை பார்ப்பவர்கள். அந்த 63 பேரில் நால்வர் துப்புரவாளர்கள், மற்றொருவர் பாதுகாப்பு இடைவெளித் தூதர்.
மற்ற மூவரும் கிருமி தொற்றிய குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அமைச்சு கூறியது. ஊழியர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
இங்கிருந்து கிருமி பரவுவதை விரைவாகத் தடுக்கும் நோக்கத்துடன், இம்மாதம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சைனாடவுன் காம்ப்ளக்ஸ் கட்டடத்திற்கு 'சேஃப் எண்ட்ரி' பதிவுமுறையைப் பயன் படுத்தி சென்று இருப்போருக்கு சுகாதார ஆபத்து விழிப்பூட்டு எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்படும்.
அவர்கள் உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 14 நாட்கள் சமூகக் கலந்துறவாடல்களை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சைனாடவுன் காம்ப்ளக்ஸ் கடைத்தொகுதியை மூடும் உத்தரவை சனிக்கிழமை இரவு நேரத்தில் சுகாதார அமைச்சு வெளியிட்டது. இதனால் இங்குள்ள சுமார் 700 கடைகள் நேற்றைய ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை இழந்தன. நாளை மறுதினம் இரவு வரை இந்த நிலையே அங்கு தொடரும்.

