சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள், கட்டுமான தாமதங்கள் இடம் பெற்று வந்தாலும் மாதம் புதிதாக ஏறத்தாழ 1,000 புதிய உணவு, பானக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
இங்கு சென்ற ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 1,000 புதிய உணவு, பான சில்லறை வர்த்தகக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக நைட் ஃபிரங்க் நிறுவனம் தனது ஜூலை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை, மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது.
இதைவிட குறிப்பிடத்தக்க வேறு ஓர் அம்சமும் இருக்கிறது.
அதாவது, தொற்றுக்கு முந்தைய காலத்துடன்- 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தொற்று காலத்தில் அதிகமான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 33,230 கடைகள் மூடப்பட்டன. திறக்கப்பட்ட கடைகள் 44,317 என்று கணக்குப் பதிவியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் தெரிவிக்கிறது.
புதிதாக திறக்கப்பட்ட கடைகளில் ஒன்றான 'அனலாக்' என்ற கடை, சைம்ஸ் (Chijmes) கட்டடத்தில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளரான திரு விஜய் முதலியார், 32, காலம் சிரமமாக இருந்தாலும் காத்திருக்க இயலாது என்று தெரிவித்தார்.

