குறுக்குத் தீவுப் பாதையில் அமையும் லோயாங் எம்ஆர்டி நிலையத்துக்கான கட்டுமானப் பணி இவ்வாண்டிறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகளை ஒருங்கிணைக்க, அப்பகுதியில் சாலை போக்குவரத்தை மாற்றிவிடுவதற்கான தேவை இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
லோயாங் நிலையம் மற்று சுரங்கப்பாதைகளின் வடிவமைப்பு, கட்டுமானத்துக்காக $748 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை தான் வழங்கியிருப்பதாக ஆணையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 13) தெரிவித்தது.
டொங்கா ஜியோலாஜிக்கல் எஞ்சினியரிங் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை, வோ ஹப் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியிக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மற்ற எம்ஆர்டி நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகளையும் இவ்விரு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
லோயாங் அவென்யூவில் அமையவிருக்கும் லோயாங் நிலையம், குறுக்குத் தீவுப் பாதையில் மூன்றாவது நிலையமாகும். குறுக்குத் தீவுப் பாதையின் முதலாம் கட்டத்தில் கட்டப்படவிருக்கும் 12 நிலையங்களில் லோயாங்கும் அடங்கும்.
29 கிலோ மீட்டர் நீளமுடைய குறுக்குத் தீவுப் பாதையின் முதல் கட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் 2030க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

