கீழறுப்புச் சட்டத்தை ரத்து செய்துவிட லாம் என்று உள்துறை அமைச்சு விரும்புகிறது. அந்தச் சட்டம் 1938ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதுமுதல் ஆறு முறை மட்டுமே அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கீழறுப்பு (ரத்து) சட்டம் நேற்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கீழறுப்பு நோக்கங்களுடன் கூடிய நடத்தைகளை அந்தச் சட்டம் குற்றமாக்கு கிறது. கீழறுப்புச் செய்திகளைக் கொண்டு உள்ள செய்தித்தாட்கள் வெளியீட்டை நிறுத்தி வைக்கவும் அத்தகைய வெளியீடு களின் விநியோகத்தைத் தடுக்கவும் அந்தச் சட்டம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
கீழறுப்புச் சட்டம் கடைசியாக 2016ல் பயன்படுத்தப்பட்டது.
இணையத்தில் பதிவுகளை இடம்பெறச் செய்து அதன் வழியாக வெளிநாட்டினருக்கு எதிரான உணர்வுகளுக்கு ஊக்கமூட்டிய 'தி ரியல் சிங்கப்பூர்' என்ற இணையத்தளத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தனிநபர்களுக்கு எதிரான வழக்கில் அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
காலப்போக்கில் பல புதிய சட்டங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நடப்புக்கு வந்துள்ளதை அமைச்சு சுட்டிக்காட்டியது. சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம், நீதி நிர்வாகம் (பாதுகாப்பு) சட்டம், விரும்பத்தகாத வெளியீட்டுச் சட்டம், செய்தித்தாள், அச்சீட்டு நிறுவனச் சட்டம் முதலானவை அவற்றில் உள்ளடங்கும்.
இவற்றின் காரணமாக கீழறுப்புச் சட்டத்தின் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது என்றும் அதை ரத்து செய்துவிடலாம் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இருந்தாலும் அந்தச் சட்டத்தின் ஓர் அம்சம் இன்னமும் ஏற்புடையதாக இருக்கிறது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதாவது வெவ்வேறான குழுக்களுக்கு இடையில் சமூகப் பிணைப்பை உறுதிப்படுத்த அந்த அம்சம் வகை செய்கிறது. இதில் தொடர்ந்து போதிய அளவுக்குக் கவனம் செலுத்தப்படுவதை உறுதிப்படுத்த தண்டனை விதித் தொகுப்பு திருத்தப்பட வேண்டும் என்றது அமைச்சு.
ஆகையால், இதற்கான திருத்தங்களை அமைச்சு முன்மொழிகிறது. கீழறுப்புச் சட்டத்தின்படி குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும். அந்தச் சட்டம் ரத்தாகும்போது கைது அதிகாரத்தைக் கையாள போதிய ஏற்பாடு தேவை என்று மசோதா விரும்புகிறது.
போலிசார் இன்னமும் விரைவாக ஆற்றலுடன் செயல்படுவதை உறுதிப்படுத்த இப்போது தண்டனை விதித்தொகுப்பின் கீழ் வரும் இதர குற்றச்செயல்களைக் கைது செய்யத்தக்க குற்றச்செயல்களாக மாற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சு உத்தேசிக்கிறது.
ஒருவரின் சமய, இன உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்துவது; வெவ்வேறான இன, சமயக் குழுக்களுக்கு இடையே பிளவைத் தூண்டிவிடுவது, இன சமயக் குழுக்களுக்கு இடையில் நல்லிணக்கம் கெடுவதற்கு வகை செய்யும் செயல்களைச் செய்வது போன்றவை அந்தக் குற்றச்செயல்களில் உள்ளடங்கும்.

