வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மானிய விநியோக முறை தானியக்கமயமாகிறது. விண்ணப்பதாரர்கள் மானியம் பெறத் தகுதி பெறுகிறார்களா என்பதையும் இந்த முறையே தீர்மானிக்கிறது.
தானியக்கமயமானதும் மானியம் பெற ஒருவர் தகுதி பெறுகிறாரா இல்லையா என்பதைப் புதிய முறை துல்லியமாகக் கணித்துவிடும்.
சொத்து உடைமை பற்றிய அல்லது மாற்று வருமானம் பற்றிய தகவல்களை வீவகவிடம் தெரிவிக்க விண்ணப்பதாரர்கள் தவறினாலும்கூட புதிய தானியக்க முறை அவர்கள் தகுதி பெறுகிறார்களா என்பதைக் கணித்துவிடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தகுதி பெறாத 13 விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் $405,000 வீட்டு மானியம் கொடுக்கப்பட்டதாக கடந்த ஜூலை மாதம் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் தெரிவித்தது.
இதனையடுத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
12 பேருக்குத் தவறுதலாகக் கொடுக்கப்பட்டுவிட்ட மத்திய சேமிப்பு நிதி வீட்டு மானியத்தைத் திரும்பப் பெற வீவக உடனடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது என்று நேற்று மன்றத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.
தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் தெரிவித்த 13வது விண்ணப்பதாரர் சரியாக மதிப்பிடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த அலுவலகம் சுட்டிக்காட்டி இருக்கும் மேலும் 1,055 விண்ணப்பதாரர்களின் தகுதி நிலையைக் கழகம் சரிபார்த்து வருகிறது.
இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கை இந்த ஆண்டுக்குள் முடிவடையும். பிறகு முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 2018 ஏப்ரல் 1ஆம் தேதி முதல், சென்ற ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை குடும்ப மானியம் அல்லது தனிநபர் மானியம் கேட்டு விண்ணப்பித்த மற்றும் அந்த மானியங்களைப் பெற்ற மறுவிற்பனை வீடு கொள்முதல்காரர்களின் தகவல்களை அந்தத் தணிக்கை அலுவலகம் பகுத்து ஆராய்ந்தது. பிறகு தன்னுடைய அறிக்கையை அது வெளியிட்டது.
குடும்ப அல்லது தனிநபர் மானியமாக மொத்தம் $807.77 மில்லியன் கேட்டு 22,627 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.
அவர்களில் 1,152 பேர் அந்த மானியத்தைப் பெற தகுதி இல்லாமல் இருக்கலாம் என்பதை அந்த அலுவலகம் சுட்டியது.
உண்மையான வருமானம், தனியார் சொத்து உடைமை போன்ற தகவல்களை வீவகவிடம் தெரிவிக்கத் தவறிய 12 விண்ணப்பதாரர்களுக்கு மானியம் தவறான முறையில் கொடுக்கப்பட்டுவிட்டது என்று நேற்று அமைச்சர் திரு லீ நாடாளு மன்றத்தில் குறிப்பிட்டார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம்மிற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அந்த விண்ணப்பதாரர்களைப் பொறுத்தவரை தெரிவிக்காமல் விடுபட்டுவிட்ட தகவல்கள் பற்றி தனித்தனியாக ஆராயப்படும் என்றும் தெரிவித்தார்.
மானியம் கேட்டு வரும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதிகாரிகளைக் கொண்டு வீவக சரிபார்க்கிறது.
இந்தச் சரிபார்ப்பு நடைமுறை பெரும்பாலும் சிக்கலானது என்று திரு லீ குறிப்பிட்டார்.

