மக்கள் கழகம் நிர்வகிக்கும் இரண்டு பெரிய மேம்பாட்டுத் திட்டங்களுக்குக் கூடுதலாக ஏறத்தாழ $60,000 செலுத்தப்பட்டிருக்கக்
கூடும் என்று கழகம் தன்னிச்சையாக நடத்திய புலன்
விசாரணையில் தெரியவந்துள்ளது.
'அவர் தெம்பனிஸ் ஹப்', 'ஹார்ட்பிட்@பிடோக்' ஆகிய இரண்டு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான கணக்குத் தணிக்கையில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் கழகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
'அவர் தெம்பனிஸ் ஹப்'புக்கான கட்டுமானப் பொருட்களுக்குக் கூடுதலாக கிட்டத்தட்ட $2 மில்லியன் செலுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் தனது வருடாந்திர கணக்குத் தணிக்கை அறிக்கையில்
கோடிட்டுக் காட்டியது.
$5 மில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்தங்களுக்கு முழு விலை ஏற்ற இறக்கங்களுக்கான சரிசெய்யும் அணுகுமுறையை அரசாங்க அமைப்புகள் கட்டாயம் கடைப்
பிடிக்கவேண்டும் என்று அமைச்சர் டோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி கட்டுமானத் திட்டம் நடைபெறும் காலகட்டத்தில் எஃகு, கான்கிரீட் போன்ற முக்கியமான பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தைக் கருத்தில்கொண்டு கட்டணம் செலுத்தும் தொகையை மாற்றவேண்டும்.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து, 31 பொது கட்டமைப்புத் திட்டங்களை மக்கள் கழகம் மறுஆய்வு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிற்கு அமைச்சர் டோங் பதிலளித்தார்.
இரண்டு கட்டுமானத் திட்டங்களில் ஏழாண்டு காலகட்டத்தில் நிகழ்ந்த விலை ஏற்ற இறக்கம் 70 விழுக்காடு மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது என அதிலிருந்து தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். இதைப்போன்றே 'அவர் தெம்பனிஸ் ஹப்'பின் மேம்பாட்டுப் பணியில் நடந்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து, கட்டுமானப் பணி ஒப்பந்தங்களில் அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரியாகவும் தெளிவாகவும் இருப்பதை மக்கள் கழகம் உறுதி செய்துள்ளதாக அவர் கூறினார். தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ள கட்டுமானப் பணிகள் தொடர்பிலான 252 குறைபாடுகளையும் மக்கள் கழகம் ஆராய்ந்ததாக திரு டோங் கூறினார்.
"ஒப்பந்தங்களின் மற்ற அம்சங்கள் தகுந்த ஒப்புதலுடனும் முறை யான ஆவணப்படுத்துதலுடனும் நிறைவேற்றப்பட்டனவா எனக் கண்டறிய மக்கள் கழகம் 252 குறைபாடுகளை மறுஆய்வு செய்து வருகிறது. முறையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று தெரியவந்தால் அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று அமைச்சர் டோங் தெரிவித்தார்.
கட்டுமானத் திட்டங்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சீரற்றதன்மையும் ஒப்பந்தங்களை நிர்வகிப்பதில் குறைபாடுகளும் ஏற்பட்டுள்ளதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் தெரிவித்ததை மக்கள் கழகம் தன்னிச்சையாக நடத்திய புலன்விசாரணை உறுதி செய்திருப்பதாக திரு டோங் கூறினார்.
தற்போது நடப்பில் இருக்கும் அணுகுமுறையை வலுப்படுத்த பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டோங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

