விநியோகச் சேவை ஓட்டுநர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோரின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்துள்ளார்.
செயலிகள் போன்ற தளங்களின்வழி சேவைகளை வழங்கும் ஊழியர்களுக்கான ஆலோசனைக் குழு ஆய்வை நடத்தும்.
அத்தகைய ஊழியர்களுக்கும் அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள உறவு மேலும் சமநிலையில் இருப்பதை உறுதிசெய்வது, வேலையிடத்தில் ஊழியர்களுக்கு காயம் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பது வழங்குவது போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அவர் கூறினார். நிறுவனங்களுடன் ஒப்பந்தமின்றி விருப்புரிமை அடிப்படையில் இயங்கும் ஊழியர்களுக்கான பாதுகாப்பின் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் கோ பதிலளித்தார். விநியோக ஓட்டுநர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து மனிதவள அமைச்சு ஆய்வு நடத்தும் என்று தேசிய தினக் கூட்ட உரையில் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருந்தார்.
கிராப், டிலிவரூ போன்ற தளங்களுடன் வேலை செய்யும் ஓட்டுநர்கள் போன்றோருக்கு ஒப்பந்தங்கள் இல்லாததால் இவர்களுக்கு அடிப்படை வேலை பாதுகாப்பு இல்லை எனத் திரு லீ சுட்டினார்.
விநியோக ஓட்டுநர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் உட்பட சென்ற ஆண்டு சுமார் 79,000 பேர் இத்தகைய வேலைகளின் மூலம் முக்கிய வருமானத்தை ஈட்டியதாக டாக்டர் கோ சொன்னார்.

