சிங்கப்பூர் நிறுவனங்களின் இவ்வாண்டு நான்காம் காலாண்டுக்கான வர்த்தகம் தொடர்பான நம்பிக்கை சற்று மேம்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உற்பத்தித் துறை, நிதிச் சேவைகள் ஆகியவற்றுக்கான தேவை வலுவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் நம்பிக்கை மேம்பட்டுள்ளதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
எனினும், கட்டுமான, போக்குவரத்துத் துறைகள் தொடர்ந்து களையிழந்து காணப்படுகின்றன.
உற்பத்தி, நிதிச் சேவைத் துறைகளில் நம்பிக்கை அதிகரித்திருந்தாலும் நிலைமை மோசமாகும் அபாயம் தொடர்ந்து இருப்பதாக சிங்கப்பூர் வர்த்தகக் கடன் இலாகாவின் தலைமை நிர்வாகி ஓட்ரி சியா கூறியுள்ளார்.
சிங்கப்பூரிலும் உலகளவிலும் கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலின் தொடர்பில் இன்னும் பல அம்சங்களில் தெளிவு இல்லாமல் இருப்பதால் சிங்கப்பூரின் பொருளியல் அதனால் பாதிக்கப்படலாம் என்று அவர் கூறினார். மேலும், சீனாவின் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள், நாடுகளுக்கிடையிலான அரசியல் சூழல் தெளிவு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களும் பொதுவாக வர்த்தக நம்பிக்கையைப் பாதித்திருப்பதாக அவர் சொன்னார்.

