எஸ்பிளனேட் அரங்கின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டில் 12 மில்லியன் வெள்ளிக்குச் சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக கலைத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டதால் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை அரங்கம் பெரும் இழப்பை எதிர்கொண்டது.
கடந்த நிதியாண்டில் அரங்கிற்குக் கிடைத்த ஆதரவு மற்றும் நன்கொடையின் மதிப்பு 4.3 மில்லியன் வெள்ளியாகக் குறைந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் தொகை 5.4 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது. இதைவிட அரங்கின் வாடகை வருமானம் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. வாடகை வருமானம் 7.08 மில்லியன் வெள்ளியிலிருந்து 3.8 மில்லியன் வெள்ளியாகக் குறைந்தது. பார்வையாளர்கள் நேரில் சென்று காணும் நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டதால் அவற்றிலிருந்து வரும் வருமானம் 4.4 மில்லியன் வெள்ளியிலிருந்து 756,000 வெள்ளிக்குச் சரிந்தது.
நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விற்பனையிலிருந்து வந்த தொகை பத்தில் ஒரு பங்கிற்கும் கீழ் வீழ்ச்சி கண்டது. இப்புள்ளி விவரங்கள் கொவிட்-19 சூழலால் சிங்கப்பூர் கலைத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக எடுத்துக்காட்டுகின்றன. சென்ற ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆகக் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் எஸ்பிளனேட் அரங்கில் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. அதன் 19 ஆண்டு கால வரலாற்றில் இவ்வாறு நிகழ்ந்தது இதுவே முதல் முறை.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிக்கையில் இந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.