சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளைப் பற்றி படிக்கும்போது தமக்குப் பல அசௌகரியங்கள் ஏற்படும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடு என்பது பாதுகாப்பான இடம் என்றும் அங்கு பாதுகாப்பற்ற சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டுச் சூழலில் பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கான சிறை தண்டனைக் காலம் நீட்டப்பட்டிருந்தாலும் இன்னும் அதிகமான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாலியல் வன்கொடுமை மிகவும் கொடூரமான குற்றம் என்றும் அதன் விளைவுகள் பாதிக்கப்பட்டவர்களை வாழ்நாள் முழுவதும் பின்தொடரக்கூடும் என்றும் அதிபர் கூறினார்.
ஆனால், குற்றவாளிகளோ தங்களது தண்டனைக் காலம் முடிந்த பின் சுதந்திரமாக வெளியே வந்துவிடுகிறார்கள்.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் பிரம்படித் தண்டனை கூட விதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
இந்த வயது வரம்பு 1900களில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அக்காலக்கட்டத்தில் சராசரி ஆண்களுடைய ஆயுள் காலம் 47ஆக இருந்ததாகவும் திங்கட்கிழமை அன்று சுகாதார நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அதே தினம், பல பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைக் கடுமையாக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இது குறிப்பாக 14 வயதிலிருந்து 18 வயது வரையான சிறார்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் அவர்களிடம் பாலியல் தொடர்பான படங்களைக் காண்பிப்போருக்கும் பொருந்தும்.
குற்றவியல் சட்டத்தில் இதற்கான சிறை தண்டனைக் காலம் ஓராண்டு காலத்திலிருந்து ஈராண்டு காலமாக உயரும். இருப்பினும், பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி புகார் செய்யப்பட்டால்தான் சட்டத்தால் தலையிட முடியும் என்று அதிபர் விளக்கினார்.
மேலும் வீட்டுச் சூழலில் நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக தற்போது இருக்கும் திட்டங்கள் எவ்வளவு பயனுள்ளவை என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் பதிவிட்டார்.
சிறார்களைப் பாலியல் கொடுமை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு இவ்வாண்டு தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து இந்த சட்டத் திருத்தம், கொண்டு வரப்பட்டுள்ளது.
இம்மூன்றில் இரண்டு சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடந்ததைப் பற்றி புகார் செய்ததாலேயே வெளிச்சத்துக்கு வந்ததாக அதிபர் குறிப்பிட்டார்.
முதல் சம்பவத்தில் தமது மகளின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகாரளித்ததை அதிபர் குறிப்பிட்டார். இரண்டாவது சம்பவத்தில் சிறுமியின் பாலியல் வன்கொடுமையைக் கண்ணுற்ற சகோதரன் அதை குடும்பத்தினரிடம் தெரிவித்ததையும் அதிபர் குறிப்பிட்டார்.
தங்களுக்கு இழைக்கப்படுவதைப் பற்றி புரிந்துகொள்ள முடியாமல் குழப்பத்தில் இருக்கும் சிறுமிகளைத் தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்ள பயம், அவமானம், அச்சுறுத்தல், குடும்ப பந்தங்கள் போன்ற உத்திகளைப் குற்றவாளிகள் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிபர் தெரிவித்தார்.
தங்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் தைரியமாகப் பேசவும், அது குறித்து எங்கு உதவி பெறலாம் என்பதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கவும் வேண்டும் என்று அவர் கூறினார்.தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புவதற்கு யாராலும் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.