ஹோட்டல் 81 அறை ஒன்றில் 40 வயது யாஸ்லீ ருஸ்டி எரிந்துகொண்டிருந்த சிகரெட்டைக் கட்டிலில் வைத்துவிட்டு சென்றார்.
இதனால் மூண்ட தீ, $7,000க்கு மேற்பட்ட சேதத்தை ஏற்படுத்தியது.
ஹோட்டலின் விருந்தினர் ஒருவரும் ஊழியர் ஒருவரும் புகையைச் சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மே மாதம் ஐந்தாம் தேதி மாலை 5.45 அளவில் அந்த ஹோட்டலுக்குச் சென்ற யாஸ்லீ புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட அறையில் தாம் இருந்ததைத் அறிந்திருந்தும், புகை பிடித்தார்.
மேலும் அவர் எரிந்துகொண்டிருந்த மூன்று சிகரெட்டுகளைக் கட்டிலின் மேல் வைத்துவிட்டு இரவு மணி 11 அளவில் அறையைவிட்டு வெளியேறினார்.
தீ எச்சரிக்கை அபாய ஒலி எழும்பியதை அடுத்து ஹோட்டலின் முகப்பில் பணி புரிந்துகொண்டிருந்த ஊழியர் திரு எல்வின் குவெக், யாஸ்லீயின் அறையிலிருந்து புகை வருவதைக் கவனித்தார்.
அறை கதவின் மீது பொருட்கள் சாய்த்து வைக்கப்பட்டிருந்ததால் அவரால் கதவைத் திறக்க முடியவில்லை.
தீயணைப்பானைப் பயன்படுத்தி கதவின் அடியில் இருந்த இடைவேளியின் வழி திரு குவெக் தீயை அணைக்க முயன்றார். ஆனால், பயனில்லை. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
அவர்கள் திரு குவெக்கையும் ஹோட்டல் விருந்தினர் ஒருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
போலிசார் யாஸ்லீயை மே மாதம் ஏழாம் தேதி கைது செய்தனர். அப்போது அவரிடத்தில் போதைப்பொருள் தொடர்பான கண்ணாடிக் குழாய் ஒன்று இருந்தது தெரிய வந்தது. சோதிக்கப்பட்ட யாஸ்லீயுடைய சிறுநீரில் போதைப் பொருளின் தடயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
தீ மூட்டிய காரணத்துக்கும் போதைப் பொருளை வைத்திருந்ததற்கும், அதை நுகர்ந்ததற்கும் சிங்கப்பூரரான யாஸ்லீக்கு 15 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கண்மூடித்தனமாகத் தீ மூட்டியதற்கு அவருக்கு 18 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். போதைப்பொருள் வைத்திருந்ததற்கும் அதை நுகர்ந்ததற்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும் $20,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.