'தி ஆன்லைன் சிட்டிசன்' (டிஓசி) எனும் சமூக அரசியல் இணையத் தளத்தின் உரிமத்தை தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இதன் மூலம், அது இப்போதைக்கு அதன் இணையத் தளம், மற்றும் சமூக ஊடகத் தளங்களை செயல்படுத்த முடியாது என்று ஐஎம்டிஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
டிஓசி தனக்குக் கிடைக்கும் நிதி தொடர்பான அனைத்து விவரங்களைத் தொடர்ந்து தெரிவிக்க தவறியதால், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஐஎம்டிஏ கூறியது.
அதன்படி நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பிறகு டிஓசி, தனது இணையத் தளம், மற்றும் சமூக ஊடகத் தளங்களில் எவ்வித பதிவுகளையும் பதிவேற்றம் செய்ய முடியாது.
ஐஎம்டிஏ விதிமுறைகளை டிஓசி தொடர்ந்து மீறினால், இம்மாதம் 28ஆம் தேதியன்று அதன் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் ஐஎம்டிஏ விவரித்தது.
தற்போது பதிவு செய்யப்பட்ட இரு இணையத் தளங்களில் ஒன்று டிஓசி. மற்றொன்று தி என்டிபென்டண்ட் சிங்கப்பூர் எனும் இணையத் தளம். சிங்கப்பூரின் கட்சி அரசியல் விவகாரங்கள் பற்றி கருத்துகள் வெளியிட்டு, அதன் மூலம் கலந்துரையாடலை ஊக்குவிக்கும் இணையத் தளங்கள் தங்கள் நிதி தொடர்பான அனைத்து தகவல்களையும் ஐஎம்டிஏ-விடம் தெரிவிக்க வேண்டும்.
"இதன் மூலம் வெளிநாட்டுச் சக்திகளின் கட்டுப்பாட்டில் அத்தகைய தளங்கள் செல்வதைத் தவிர்க்க முடியும். உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுச் சக்திகளின் தாக்கம் இருக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது," என்றும் ஐஎம்டிஏ விளக்கியது. "மேலும் ஐஎம்டிஏ-யின் சட்டபூர்வ கடப்பாடுகளுக்கு இணைக்க விருப்பமில்லை என்று டிஓசி கூறியுள்ளது," என்று தெரிவித்த ஐஎம்டிஏ, நேற்றைக்குள் அதன் காரணத்தைத் தெரிவிக்க இறுதி கெடு கொடுத்திருந்தது.இதன் தொடர்பான விவகாரத்தை தான் சட்டபூர்வமாகச் சந்திக்க தயார் என்றும் டிஓசி தெரிவித்துள்ளது.

