மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 12 பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் $9.7 மில்லியன் தொகை தொடர்பான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மோசடிச் சம்பவத்தில் தொடர்புள்ள நான்கு பேர், சம்பவம் நிகழ்ந்த காலக்கட்டத்தில் தனியார் கட்டுமான நிறுவனமான சிவில்டெக் என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
அவர்களில் ஓங் காக் பெங், 41, கான் காக் லியோங், 43 ஆகியோர் அந்நிறுவனத்தின் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றி வந்தனர். டான் சென் சுவான், 39, நிறுவன குழுமத்தின் நிதி மேலாளராகவும் லியாவ் லீ மெங், 55 என்பவர் திட்ட மேலாளராகவும் பணியாற்றி வந்தனர்.
ஐந்தாமவரான போங் சைக் கிங், 43, இன்னொரு கட்டுமான பொறியியல் நிறுவனமான குளோபல் சிவில் என்ஜினியரிங் என்னும் நிறுவனத்தின் இயக்குநராவார்.
இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து, துணை ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து முடிக்கப்படாத பணிகளுக்காக சிவில் டெக் நிறுவனத்திடம் பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இந்தத் தகவலை லஞ்ச ஊழல் புலனாய்வுப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மோசடிச் சம்பவம் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடந்ததாக அந்த அறிக்கை கூறியது.
மோசடிச் சம்பவங்களில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மேற்கண்ட ஐவரும் தலா 30 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். செய்யாத வேலைக்கு பொய்யான விலைப்பட்டியலைத் தயாரித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், சிவில் டெக் நிறுவனத்திடம் $9.7 மில்லியன் மதிப்புள்ள தொகையை மோசடி செய்ய சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த ஐவரும் தலா மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
இவர்களுடன் சிவில் டெக் நிறுவனத்தின் துணை ஒப்பந்ததாரர்கள் ஏழு பேர் மீதும் குற்றங்கள் சுமத்தப்பட்டன.
அவர்களில் ஒருவர் ஹுவாங் ஸிகுவோ, 47. இவர் ஹுவா ரோங் என்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநராவர்.
ஹுவாங், இந்தச் மோசடிச் செயலில் சிவில் டெக் நிறுவனத்தில் பணிபுரிந்த ஓங் காக் பெங்குக்கு உதவி செய்து, செய்யாத வேலைக்காக $1.4 மில்லியன் தொகை பெறுவதற்கு போலியான தரவுகளைத் அளித்தது உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இந்த 20 குற்றச்சாட்டுகளில் 19 குற்றச்சாட்டுகளில் ஓங் சம்பந்தப்பட்டுள்ளார் என லஞ்ச ஊழல் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோசடிச் சம்பவங்களில் குற்றச்சாட்டுப்பட்டுள்ள எஞ்சிய ஆறு துணை ஒப்பந்ததாரர்கள் வெவ்வேறு சிறு நிறுவனங்களின் இயக்குநர்களாவர்.
அவர்கள் ஹவுசிங் ரீபிளேஸ்மெண்ட் நிறுவனத்தின் டான் ஹெங் லீ, 34, ருய் ஃபெங் என்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் சியோங் யாம் செங், 45, ஹோங் ஹாய் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ஸுவாங் ஹி, 48, அலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்தின் வோங் முன் கின், டோவெல் என்ஜினியரிங் நிறுவனத்தின் ஆங் லை சூன், 57, டா ஹோ ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் யூ யின்ஜீ, 59 ஆகியோராவர்.
இவர்கள் ஒவ்வொருவரும் தலா 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 12 பேரில் 11 பேர் சிங்கப்பூரர்கள். கான் மட்டும் மலேசிய நாட்டவராவார்.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

