தேசிய அளவில் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கியது.
100க்கும் அதிகமானோர் நேற்று டெக் கீ சமூக மன்றத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வரும் நாட்களில் 140,000க்கும் அதிகமான மூத்தோருக்கு ஃபைசர் அல்லது மொடர்னா பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும் எனச் சுகாதார அமைச்சு அறிவித்தது.
தஞ்சோங் பகார் சமூக மன்றம், இதர சில தடுப்பூசி நிலையங்கள், பொது மருந்தகங்கள், 'பிஹெச்பிசிஸ்' எனப்படும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் ஆகியவற்றிலும் மூத்த குடிமக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
அதிகமானோரிடையே கொவிட்-19 கிருமி பரவிவருவதன் தொடர்பில் சிலர் கவலை தெரிவித்தனர். அதனால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
சிலர் ஆண்டுதோறும் சளிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள். அதேபோல்தான் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதும் என்று அவர்கள் ககூறினர்.
என்டியுசி இன்கம்மின் முன்னாள் தலைமை நிர்வாகியான டான் கின் லியேன் டெக் கீ சமூக மன்றத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 100க்கும் அதிகமானோரில் ஒருவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் மோசமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் ஐந்திலிருந்து எட்டு மடங்கு அதிகம் என்பதை அவர் சுட்டினார்.
ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம் நடத்தும் 14 தடுப்பூசி நிலையங்களில் டெக் கீ சமூக மன்றமும் ஒன்று. தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் நேற்று மட்டும் 200க்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்ததாகக் குழுமம் ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
தங்களின் தடுப்பூசி நிலையங்கள் மூத்தோருக்கு உகந்தவையாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது. சக்கர நாற்காலிகள், கைகளை அமர்த்தும் அம்சம் கொண்ட நாற்காலிகள் உள்ளிட்டவை மூத்தோருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளில் சில.
சிலர் இதற்கென நேரத்தைத் தேர்ந்தெடுக்காமல் டெக் கீ சமூக மன்றம் உட்பட தடுப்பூசி நிலையங்களுக்கு நேரடியாகவே சென்று ஊசியைப் போட்டுக்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.