தான் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக நிரூபிக்க மருத்துவரின் ஆவணத்தை மாற்றியமைத்ததாக சீனாவைச் சேர்ந்த ஷாங் ஷாவ்பெங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உணவகத்தில் உணவருந்துவதற்காக அவர் அவ்வாறு செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கொவிட்-19 கிருமிக்கு எதிராக ஷாங் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஆவணம் காண்பித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை. உணவகத்திற்குள் செல்ல போலித் தடுப்பூசி ஆவணத்தை தயாரித்ததாக ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
மாற்றியமைக்கப்பட்ட ஆவணத்தின் மின்னிலக்க வடிவத்தைக் கொண்டு இம்மாதம் ஒன்றாம் தேதியன்று ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஓர் உணவகத்திற்குள் ஷாங் நுழைய முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆவணம் மாற்றியமைக்கப்பட்டிருக்கக்கூடும் எனச் சந்தேகித்த உணவக ஊழியர்கள், அங்கிருந்து கிளம்புமாறு அவரிடம் கூறியிருக்கின்றனர். அதற்கு இணங்கி ஷாங் அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு சம்பவம் குறித்து போலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உணவகத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்களுக்கும் அமலாக்க அதிகாரிகளுக்கும் எதிராக மொத்தம் 92 புகார்கள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 22 புகார்கள் ஆதாரம் கொண்டவை என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
அவற்றில் 20 புகார்கள் தூதர்களுக்கு எதிராகவும் இரண்டு அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராகப் பதிவானவை.

