வெளியே சென்று பிறருடன் பேசிப் பழகுவதை அடுத்த இரண்டு வாரங்களுக்கு முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறு ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள், அவர்களுடன் வசிப்போர் ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று முன்தின நிலவரப்படி ஒரு நாளைக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் காணப்படாத அளவில் பதிவானதைத் தொடர்ந்து அமைப்பு இவ்வாறு அறிவுரை வழங்கியது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் மூத்த குடிமக்கள் மோசமாக நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது என்று அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. முடிந்தவரை வீட்டில் இருக்குமாறும் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அது மூத்தோரைக் கேட்டுக்கொண்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோரை விரைவில் அதைப் போட்டுக்கொள்ளுமாறும் அமைப்பு வேண்டியது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்குக் கிருமித்தொற்றால் மோசமாக நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் ஆறு மடங்கு அதிகம் என்று அமைப்பு எச்சரித்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நேரத்தை இணையம்வழி தேர்ந்தெடுக்க மூத்தோர் தலைமுறை அலுவலகத்தின் தூதர்கள் மூத்த குடிமக்களுக்கு உதவுவர்.
அதோடு, எப்பொழுது வேண்டுமானாலும் 'பிஹெச்பிசிஸ்' எனப்படும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள், பொது மருந்தகங்கள், கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் ஆகியவற்றுக்குச் சென்றும் மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
நடமாட சிரமப்படும் மூத்தவரைத் தடுப்பூசி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல மூத்தோர் தலைமுறை அலுவலகம் ஒருவரை நியமிக்கும்.
வீட்டில் இருந்தபடி தடுப்பூசி போட்டுக்கொள்ள எண்ணும் மூத்தோருக்கு உதவ ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படும், மூத்தோரில் சிலர் வீட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிபெறுவர்.
சரியாக முகக் கவசத்தை அணிவது, பேசும்போது முகக் கவசத்தை கீழே இறக்குவது போன்ற செயல்களின் மூலம் சுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறும் அமைப்பு மூத்த குடிமக்களைக் கேட்டுக்கொண்டது. முகக் கவசங்களை அடிக்கடி மாற்றவேண்டும் அல்லது அவற்றைச் சுத்தம் செய்யவேண்டும் என்று அது வலியுறுத்தியது. மூத்தோர் அடிக்கடி தங்களின் கைகளைக் கழுவவேண்டும் என்றும் முடிந்தவரை தங்களின் முகங்களைத் தொடாமல் இருக்கவேண்டும் என்றும் அது சொன்னது.
மேலும், மூத்தோர் வெளியில் பிறருடன் பேசிப் பழகுவதைக் குறைத்துக்கொள்ள வகைசெய்ய அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்க குடும்பத்தார் உதவி செய்யலாம் என்றும் அமைப்பு குறிப்பிட்டது.
நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 837 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 77 பேர் வெளிநாட்டு ஊழியர்கள், ஐவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.

