23 ஆண்டுகளாகத் தனியார் துணைப்பாட வகுப்பு ஆசிரியராக வேலை செய்தவர் ஷர்மிளா கோபால கிருஷ்ணன் (படம்). அந்த காலகட்டத்தில் அவர் கற்றல் சவால்களை எதிர்நோக்கும் பல சிறுவர்களைச் சந்தித்திருக்கிறார்.
கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் முழுக் கவனத்துடன் பாடத்தில் ஈடுபட சிரமப்படும் மாணவர்கள் வகுப்பில் அழுவதைக் கவனித்திருக்கிறார். அத்தகைய மாணவர்களின் பார்வையிலிருந்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ததாகத் திருவாட்டி ஷர்மிளா கூறினார். மாணவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் உதவிக்கரம் நீட்டத் தான் இருப்பதாக அவர்களுக்கு ஆறுதல் வழங்கியிருக்கிறார் இவர்.
இதனையொட்டி சிறப்புத் தேவை உள்ள மாணவர்களுக்குக் கற்றுத் தரும் பயிற்சியை மேற்கொள்ள திருவாட்டி ஷர்மிளா முடிவு செய்தார். சிங்கப்பூர் 'டிஸ்லெக்சியா' கற்றல் குறைபாடு சங்கத்தின் சிறப்புத் தேவையுடையோருக்கான கல்வி வழங்கும் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக அவர் அவதரித்தார்.
திருவாட்டி ஷர்மிளா உட்பட 67 பேர் சங்கத்தின் பயிற்சித் திட்டத்தை மேற்கொண்டு சிறப்புத் தேவை பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்தனர்.
11 ஆண்டுகளாக இயங்கிவரும் இச்சங்கம், இதுவரை 577 சிறப்புத் தேவை பயிற்றுவிப்பாளர் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. முதுநிலை, பட்டயக் கல்விப் பாடங்களை சங்கம் வழங்குகிறது.
'போஸ்ட்கிராஜுவெட்' பட்டக் கல்விக்குப் பிறகு மேற்கொள்ளும் சான்றிதழ் கல்வியை மேற்கொண்ட திருவாட்டி ஷர்மிளா, தான் மெற்கொண்ட பாடங்கள் வாயிலாகவும் சக மாணவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட திறன்களை எண்ணி மனநிறைவு அடைவதாகச் சொன்னார்.

