வீவக, கொண்டோமினிய வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள், கொண்டோமினியம் வீடுகளுக்கான வாடகை தேவை கடந்த மாதம் மீண்டும் உயர்ந்ததை சொத்துச் சந்தை இணையத்தளமான எஸ்ஆர்எக்ஸின் தரவு காட்டியது. மாத அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் தனியார் வீடுகளுக்கான வாடகை 6.6% அதிகரித்து, 4,907 வீடுகள் வாடகைக்கு விடப்படன. அதே காலப்பகுதியில் வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை 6% அதிகரித்து 1,842 ஆக இருந்தது. வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகள், கொண்டோமினியம் வீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இருமாதங்கள் சற்று சரிந்திருந்தன.
ஆண்டு அடிப்படையில், வாடகைக்கு விடப்பட்ட கொண்டோமினியம் வீடுகள் 2.1 விழுக்காடும் வீவக வீடுகள் 5.7 விழுக்காடும் உயர்ந்துள்ளன.
கடந்த மாதம் கொண்டோமினியம் வீட்டு வாடகை ஒப்பீட்டளவில் மாறாமல், ஜூலை மாதத்துடன் ஒப்பிட 0.08% குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீவக வாடகை 0.3% அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக 14வது மாதமாக வீவக வாடகை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்திற்கு முன், கொண்டொமினிய வாடகை தொடர்ந்து ஏழு மாதங்களாக உயர்ந்து வந்தது.
தனியார் வீட்டு விற்பனை சரிவு
ஜூலை மாதத்தில் ஆறு மாதங்களில் காணாத அளவு அதிகரித்திருந்த புதிய தனியார் வீட்டு விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 24% சரிந்தது. மேம்பாட்டாளர்கள் புதிய அறிவிப்புகளைக் குறைத்ததும், வாங்குவோர் சீனர்களின் 'ஹங்கிரி கோஸ்ட்' மாதம், கொவிட்-19 இரண்டாம் கட்ட (அதிக எச்சரிக்கை) கட்டுப்பாடுகள் வீடு வாங்குவதை ஒத்திவைத்ததும் இதற்குக் காரணமாகும்.
ஜூலை மாதத்தில் விற்கப்பட்ட 1,591 வீடுகளுடன் ஒப்பிட கடந்த மாதம் 1,215 வீடுகள் விற்கப்பட்டன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் புதிய வீட்டு விற்பனை ஒப்பீட்டளவில் வலுவாக இருந்தது. சென்ற ஆண்டு விற்பனையான 1,258 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாத வீட்டு விற்பனை 3.4% குறைந்துள்ளது.
மாணவர்களின் வீட்டில்
கொவிட்-19 பரிசோதனை
தொடக்கப்பள்ளிகள், கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள், சிறப்பு கல்விப் பள்ளிகள் (மாணவர்கள் அல்லது இளையோர் பிரிவுகள்) ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள், ஊழியர்களுக்கு இந்த வாரத்தில் மொத்தம் 808,000 ஆன்டிஜென் விரைவு பரிசோதனை (ART) கருவிகள் விநியோகிக்கப்படும்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செய்தித் தொடர்பாளர், இந்த வாரம் மாணவர்கள் பெற்றோரின் உதவியுடன் வீட்டில் சுய பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
"இது கொவிட்-19 உடன் வாழக் கற்றுக்கொள்வதற்கான ஓர் அம்சமாக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய தயார்நிலைக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வது. மாணவர்கள், பள்ளிச் சூழலைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒருமுறை மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையாக இது இருக்கும்," என்று அவர் கூறினார்.
லாபநோக்கமற்ற ஊடக நிறுவனம்: பேட்ரிக் டேனியல் விளக்கம்
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் பங்குதாரர்கள் அதன் ஊடக வர்த்தகத்தை தனி நிறுவனமாகப் பிரிக்கும் திட்டத்திற்குப் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
உத்தரவாதத்தால் வரைநிலை கொண்ட ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்று எஸ்பிஎச் ஊடக நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாகியான திரு பேட்ரிக் டேனியல் கூறியுள்ளார். அதேநேரத்தில், எஸ்பிஎச்சின் முக்கிய வர்த்தகத்தை பங்குதாரர்களுக்கு லாபமளிக்கும் ஒரு நிறுவனமாக இயங்க வழிவிடும் என்று 89.3 வானொலிக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.
மேலும் லாபநோக்கமற்ற நிறுவனம் பற்றி விளக்கிய அவர், எஸ்பிஎச் ஊடக நிறுவனம் தொடர்ந்து சிங்கப்பூரில் முக்கிய பங்காற்றுவதற்கான திட்டங்களையும் விவரித்தார்.

