கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை வேலையிடப் பாதுகாப்பு தொடர்பாக நியாயமான வேலை நடைமுறைக் கண்காணிப்புக் குழுவிடம் ஒவ்வோர் ஆண்டிலும் சராசரியாக 379 புகார்கள் செய்யப்பட்டதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அவற்றில் ஏறத்தாழ 60 விழுக்காடு குடியுரிமை தொடர்பிலானவை என்றார் அவர்.
வயது, பாலினம், இனம், மொழி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பாகவும் புகார்கள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திருமண பந்தம், குடும்பப் பொறுப்புகள் தொடர்பான பாகுபாடு குறித்து 13 புகார்கள் செய்யப்பட்டன.
சமய அடிப்படையிலான பாரபட்சம் குறித்து ஏழு புகார்களும் உடற்குறையுள்ளோருக்கு எதிரான பாகுபாடு குறித்து இரண்டு புகார்களும் செய்யப்பட்டன.
பைனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே கேட்ட கேள்விக்கு டாக்டர் டான் நாடாளுமன்றத்தில் எழுதுபூர்வ பதிலளித்தார்.
அனைத்து வேலையிடப் பாகுபாடுகள் குறித்தும் நியாயமான, முற்போக்கான வேலை நடை
முறைக்கான முத்தரப்புக் கூட்டணி விசாரணை நடத்தியதாக டாக்டர் டான் கூறினார்.
முன்வைக்கப்பட்ட புகார்களில் பெரும்பாலானவற்றக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்றும் பெரும்பாலான புகார்கள் தவறான புரிதலால் செய்யப்பட்டவை என்றும் மனிதவள அமைச்சின் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததை டாக்டர் டான் உறுதி செய்தார்.
விசாரணைக்காக மனிதவள அமைச்சின் கவனத்துக்கு 121 புகார்கள் கொண்டு செல்லப்பட்டன.
நியாயமான வேலை நடைமுறை வழிகாட்டி நெறிமுறைகளை ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 41 முதலாளிகள் மீறியதாக அவற்றின் மூலம் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வேலை அனுமதி அட்டைச் சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

