வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுத் திட்டங்களைக் கட்டிவரும் நிறுவனங்களுக்கு எஃகு விலை ஏற்ற இறக்கத்திலிருந்து இன்னும் ஒன்பது மாதங்களுக்கு பாதுகாப்புஅளிக்க கழகம் எடுத்த நடவடிக்கையால் இங்குள்ள 35 வீட்டுத் திட்டங்கள் பயன்பெறவுள்ளன.
கழகம் இதன் தொடர்பில் நேற்று அறிக்கை விடுத்தது.
கழக வீட்டுத் திட்டங்கள் சீராக நடைபெறுவதையும் வீடுகளை வாங்குவோருக்கு தாமதத்தைக் குறைக்கவும் அந்த வீடுகளைக் கட்டிவரும் நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு அண்மையில் கூறியது.
கழகம் வழங்கும் எஃகு விலைப் பாதுகாப்பை மேலும் ஒன்பது மாதங்கள் நீட்டிப்பதும் அவற்றில் அடங்கும் என்று அமைச்சு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்திருந்தது.
அந்தப் பாதுகாப்பு நீட்டிக்கப் படுவதால் எஃகு விலைகள் ஏறுவதைப் பற்றி கட்டுமான நிறுவனங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றது அமைச்சு.
அத்துடன் உள்ளூரில் மேற்கொள்ளப்படும் கட்டட முன்தயாரிப்புக்கு கூடுதலான கான்கிரீட் பொருட்களையும் கழகம் குத்தகை நிறுவனங்களுக்கு வழங்கும் என்று அமைச்சு கூறியிருந்தது.
நிறுவனங்கள் தங்கள் குத்தகை ஆவணத்தில் குறிப்பிட்டதைவிட கூடுதல் சிமிண்ட், மணல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.
முன்னதாக கழகம், 18 அல்லது 22 மாதங்களுக்கு எஃகு விலைப் பாதுகாப்பை வழங்கி வந்தது.
ஆனால், வழக்கமாக இந்தத் காலகட்டத்தில் முடிந்துவிடும் வீட்டுக் கட்டுமானத் திட்டங்கள் கொவிட்-19 கிருமிப் பரவலால் தாமதம் அடைந்துள்ளன.
எஃகு விலைப் பாதுகாப்பு ஒன்பது மாதங்கள் நீட்டிக்கப்படுவதால், 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வீட்டுத் திட்டத்தைத் தொடங்கிய ஒரு நிறுவனத்துக்கு மார்ச் 2022 வரை எஃகு விலை ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து எஃகு விலை 25 விழுக்காடும் கான்கிரீட் பொருட்களின் விலை 15 விழுக்காடும் உயர்ந்துள்ளன.

