கிட்டத்தட்ட மூன்று நாட்களாக மூடியிருந்த சைனாடவுன் காம்பிளக்ஸ், நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஆனால் பெரும்பாலான கடைகள் மூடியே இருந்தன. வருகையாளர்களும் அங்கொருவர் இங்கொருவருமாக காணப்பட்டனர்.
கொவிட்-19 தொற்றுக் குழுமம் அங்கு உருவாகியதை அடுத்து ஏறத்தாழ 700 கடைகளைக் கொண்டுள்ள இந்த வளாகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் மூடப்பட்டது. சுத்தம் செய்யும் பணிகளும் கிருமி நீக்கப் பணிகளும் மும்முரமாக நடந்ததை அடுத்து மீண்டும் நேற்று திறந்தது.
இதற்கிடையே சைனாடவுன் காம்பிளக்ஸ் தொடர்பிலான கிருமித்தொற்றுக் குழுமத்தில் நேற்று முன்தின நிலவரப்படி 197 சம்பவங்கள் பதிவாகிவிட்டன. தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், வளாகத்தில் வேலை பார்க்கும் கடைக்காரர்கள் மற்றும் கடை உதவியாளர்கள் ஆவர்.
மூத்தோர் தங்களின் நண்பர்களைச் சந்திப்பதற்குப் பொதுவாக இந்த வளாகத்தில் அமைந்துள்ள உணவு நிலையத்தை நாடி வருவர். ஆனால், நேற்று அதுவும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
வளாகத்தின் 260 உணவுக் கடைகளில் கிட்டத்தட்ட 10 கடைகள் மட்டுமே திறந்திருந்தன. வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதையும் பார்க்க முடியவில்லை.
இந்திய உணவுக் கடையான 'நைட்ஸ் கிச்சன்' உரிமையாளர், காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரை எட்டு பிரியாணி பொட்டலங்கள் மட்டுமே விற்பனை ஆனதாகக் கூறினார். மற்ற நாட்களில் அதே நேரத்தில் சுமார் 100 பொட்டலங்களாவது விற்றிருக்கும் என்று தெரிவித்தார்.
மாதந்தோறும் $600 வாடகை செலுத்தும் 56 வயது திரு நைட், தம்முடைய குடும்பத்துக்காக வருமானம் ஈட்டத் தம் கடையைத் திறந்து வைத்திருப்பதாகக் கவலையுடன் பகிர்ந்துகொண்டார்.

