கடந்த எட்டாம் தேதி எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென்று நின்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்து கடுமையாகக் காயமடைந்த முதியவர் நேற்று உயிரிழந்தார்.
அச்சம்பவத்தில் திரு சியா கியொக் தியாங், 68, எனும் அந்நபருக்கு தலையில் காயமும் பல இடங்களில் எலும்பு முறிவும் உண்டாயின. விலா எலும்பு முறிந்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டது.
சுமார் ஒரு வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த திரு சியா நேற்று காலை ஏழு மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த 8ஆம் தேதி காலை 11.50 மணிக்கு, பேருந்து சேவை எண் 175ல் சம்பவம் நடந்தது.
சாக்கியதித்தா- தேசிய சிறுநீரக நிலையத்தின் கிளைக்குச் சென்றுவிட்டு, திரு சியா பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
நார்த் பிரிட்ஜ் சாலையில், லியாங் சியா ஸ்திரீட்டுக்கு முன்னதாக, பூகிஸ் கியூப் அருகேயுள்ள நிறுத்தத்தில் கீழே இறங்குவதற்காக நின்று அவர் கதவின் அருகே காத்திருந்தார்.
பேருந்து சென்ற வழித்தடத்தில் ஒரு கார் குறுக்கே புகுந்தபோது, பேருந்து ஓட்டுநர் பிரேக்கை அழுத்தினார். திரு சியா தடுமாறி விழுந்தார். ஓட்டுநர், பேருந்தை உடனடியாக நிறுத்தியதும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அழைக்கப்பட்டது.
போலிசார் ஒரு 43 வயது நபரை கவனமின்றி கார் ஓட்டியதற்காகவும் கடுமையான காயங்கள் ஏற் படுத்தியதற்காகவும் கைது செய்து உள்ளனர்.
திரு சியாவின் மகளான திருவாட்டி சியா ஹுவான் லிங், 30, கடந்த ஒரு வாரமாக தமது குடும்பம் பெரும் துயத்தில் உள்ள தாகக் கூறினார்.
சம்பவத்தைப் பார்த்தவர்களை முன்வரும்படி அவர் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டிருந்தார். பலரும் முன்வந்த போதும் சம்பவத்துக்குப் பிந்தைய வற்றைத்தான் அவர்கள் கண்டதாக திருவாட்டி சியா கூறினார்.