சிங்கப்பூரின் நீச்சல் வீரர்கள் ஜோசஃப் ஸ்கூலிங், குவா செங் வென் இருவரும் தேசிய சேவை கடமையை ஆற்றுவது இனி ஒத்திவைக்கப்படாது எனத் தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஸ்கூலிங்கிற்கு 26 வயதாகிறது. குவாவின் வயது 24. சென்ற மாதம் 31ஆம் தேதி வரை இவர்கள் தேசிய சேவை ஆற்றுவது ஒத்திவைக்கப்பட்டது. இனி அந்த அனுமதி நீட்டிக்கப்படாது.
ஒத்திவைக்க விண்ணப்பித்தபோது ஸ்கூலிங்கும் குவாவும் தேசிய சேவை ஆற்ற ஒப்புக்கொண்டனர். அதற்கு ஏற்றவாறு இருவரும் தேசிய சேவைக்குச் செல்வர் என்று அமைச்சு குறிப்பிட்டது.
தேசிய சேவைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னால் சில செயல்முறைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்குப் பிறகு இருவரும் தேசிய சேவை ஆற்ற விண்ணப்பிப்பர் என்று அமைச்சு சொன்னது.
இதன் தொடர்பில் அரசாங்கம் அளித்த வலுவான ஆதரவுக்கு ஸ்கூலிங் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தேசிய சேவை ஆற்றுவதை ஒத்திவைக்காமல் இருந்திருந்தால் தான் சாதனைகளைப் புரிந்திருக்கமுடியாது என்று அவர் சொன்னார். 2016 ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் ஸ்கூலிங் தங்கப் பதக்கம் வென்றார். அதுவே ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூர் வென்ற முதல் தங்கப் பதக்கம்.
உயர்தர போட்டிகளில் பங்கேற்கத் தான் மிகுந்த ஊக்கத்துடன் இருப்பதாகவும் நீச்சலில் தான் இன்னும் அதிகமாக சாதிக்கவும் பங்காற்றவும் வேண்டும் என்றும் குவா கூறினார். தேசிய சேவை ஆற்றுவதை ஒத்திவைப்பதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாமா என்பது கலாசார, சமுதாய, இளையர் துறை அமைச்சின் ஆலோசனையுடன் முடிவெடுக்கப்படும். இதன் தொடர்பில் உள்ள வலுவான விதிமுறைகளைக் கருத்தில்கொண்டே முடிவெடுக்கப்படும்.

