போலிஸ் அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க முயன்றதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 29 வயது சூ ஷுவோபெய், ஓங் ஷு ஹொங் என்ற போலிஸ் அதிகாரிக்கு இரண்டு முறை கையூட்டு கொடுக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவங்கள் கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதியன்று நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
வழங்கப்பட்ட கையூட்டுத் தொகையை திரு ஓங் பெற மறுத்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. சம்பவங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது அடையாள விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கான சோதனையை போலிஸ் அதிகாரி மேற்கொள்ளாமல் இருக்க சூ கையூட்டு வழங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறின.
போலிஸ் காவலிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக சூ அதிகாரிக்கு 76 வெள்ளியைக் கையூட்டாக வழங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சூவின் அடையாள விவரங்களைத் தெரிந்துகொள்ள அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கான காரணம் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. அவர் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

