ப. பாலசுப்பிரமணியம்
தரமான ஆசிரியர்களை உருவாக்க, அவர்களுக்கு உயர்தர ஆசிரியர் பயிற்சியை வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் முனைவர் ஆ.ரா.சிவகுமாரன்.
இதைச் சாத்தியப்படுத்த தேசிய கல்விக் கழகத்தில் ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் பணிபுரிந்த இவர், அங்கு தமிழ்மொழியில் பட்டக் கல்வியைத் தொடங்க வேண்டும் என ஒவ்வோர் ஆண்டும் நிர்வாகத்திடம் குரல் எழுப்பினார். 'எறும்பு ஊரக் கல்லும் தேயும்' என்பதற்கேற்ப பல ஆண்டுகளின் விடாமுயற்சியின் பலனாக தேசிய கல்விக் கழகத்தில் தமிழ் மொழி பட்டப்படிப்புத் திட்டம் 2016ஆம் ஆண்டில் நனவானது.
மாணவர்களின் மொழி ஆற்றலை உயர்த்த, தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை இங்கு இரு மாதங்கள் மாணவர்களுக்கு படைப்பாற்றல் நுணுக்கங்களைக் கற்றுத் தர 2016ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அத்திட்டத்தில் பங்கெடுத்த மாணவர்களின் சிறுகதைப் படைப்புகள் மறுஆண்டு ஒரு நூலாக வெளியானது.
1980களில் கத்தோலிக்க தொடக்கக் கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், வெவ்வேறு உயர் கல்வி நிலையங்களில் கற்பித்துள்ளார்.
பின்னர் தேசிய கல்விக் கழகத்தில் இணைந்து, அதன் தமிழ்த்துறை தலைவராக 2019ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
தொடக்கநிலை, உயர்நிலை வகுப்புகளுக்கான தமிழ்ப் பாட நூல் தயாரிப்புக் குழுவில் ஆலோசகராகவும் உள்ள இவர், 20 நூல்களை வெளியிட்டுள்ளார். இந்தியா, மலேசியா, கனடா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த அனைத்துலக மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
"எவ்வளவு கற்றுக்கொடுக்கிறோம் என்பதைவிட, எத்தனை மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்பதே முக்கியம். பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும் மாணவர்கள், நான் கற்பித்த இலக்கிய பாடங்கள் மனதில் பதிந்துள்ளன எனக் கூறும்போது, பணியைச் சரியாகச் செய்துள்ளேன் என்ற திருப்தி கிடைக்கின்றது," என்றார் தேசிய கல்விக் கழகத்தின் உன்னத ஆசிரியர் விருதை ஆறு முறை பெற்றிருக்கும் 67 வயது முனைவர் சிவகுமாரன்.
தற்போது பகுதி நேரமாகக் கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இவர், இவ்வாண்டின் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆசிரியர்களில் ஒருவர்.
பணியில் சிறந்தோங்கும் தமிழ் ஆசிரியர்களை கெளரவிக்கும் விதத்தில் தமிழ் முரசு 2002ஆம் ஆண்டிலிருந்து இதர பங்காளிகளுடன் இணைந்து இவ்விருதுகளை வழங்கி வருகிறது.
நல்லாசிரியர் விருது வென்றவருக்கு வாழ்நாள் சாதனை விருது
கடந்த 2002ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் நல்லாசியர் விருது பெற்ற ஆசிரியர் திரு கு.சந்திரமூர்த்தி, இம்முறை வாழ்நாள் சாதனை விருதுபெறும் மற்றொரு மூத்த ஆசிரியர்.
செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ்ப் பள்ளியில் 1964ல் ஆசிரியர் பணியைத் தொடங்கிய திரு சந்திரமூர்த்தி, பிறகு மெக்பர்சன் தமிழ்மொழி நிலையத்தில் கற்பித்தார். 1980களில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவில் சேர்ந்து உயர்நிலை வகுப்புகளுக்கான பாட நூல், பயிற்சி நூல், பயிற்றுக் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டார்.
மேலும், ஈஸ்ட் வியூ உயர்நிலைப் பள்ளியில் காற்பந்துப் பயிற்றுவிப்பாளராக, பள்ளிகளுக்கான தேசிய அளவு காற்பந்துப் போட்டிகளுக்கு முன்னேறச் செய்தார்.
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தில் துணைப் பொருளாளராக 1992ல் பொறுப்பேற்று, சங்கம் மறு ஆண்டிலிருந்து நடத்திய தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்களுக்கான தமிழ் மொழி துணைப்பாட வகுப்புகளின் மேற்பார்வையாளராகப் பங்களித்தார்.
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி தமிழாசிரியராக 2009ல் பணி ஓய்வுபெற்ற திரு சந்திரமூர்த்தி, அப்பள்ளியில், 'மெக்ரோ திங்கிங் கான்செப்ட்' என்ற சிந்தனைத் திறன் உத்தி முறை மூலம் மாணவர்களை தமிழ் நாவல்களைப் படிக்கச் செய்ததில் பெருமிதம் கொள்கிறார்.
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ரேஸ் கோர்ஸ் சாலையில் சொந்தக் கட்டடம் வாங்கி, 2010ல் அங்கு செயல்படத் தொடங்கியபோது சங்கத்தின் கட்டடக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்து அப்பணியை செவ்வனே நிறைவேற்றியது திரு சந்திரமூர்த்தியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும்.
"40 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர் பணியில், எனது பல்வேறு பங்களிப்புகளை அங்கீகரித்து விருது வழங்கிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினருக்கு இத்தருணத்தில் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்," என்று தெரிவித்தார் 76 வயது திரு சந்திரமூர்த்தி.
வாழ்நாள் கற்றலும், வாழ்க்கை வழிகாட்டலும் இவர் இலக்கு
'ஆசிரியர் பணியில் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்திட விழைதல்' நல்லாசிரியர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற முனைவர் தமிழரசி சுப்பிரமணியனித்தின் தாராக மந்திரமாகும்.
1980களில் ஆங்கிலோ சீன தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கிய அவர் அங்கு 10 ஆண்டுகள் சேவையாற்றினார். பின் 1990களில் மாணவர்களுக்கு 'நற்குடிமக்கள்' பாடநூல் குழுவில் சிறப்பு எழுத்தாளராக முனைவர் தமிழரசி இடம்பெற்றார்.
1998ஆம் ஆண்டு முதல் ஜின்ஷான், கிராஞ்சி ஆகிய தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றிவிட்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முழு நேரமாக இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
கடந்த 2009ல் தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தில் முதன்மை ஆசிரியராக, பணி தொடங்கவுள்ள புதிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பது, மூத்த ஆசிரியர்களின் ஆய்வு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கி அடுத்த நிலைகளுக்கு முன்னேற வழிகாட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டார்.
வாழ்நாள் கற்றலுக்கு முன்னுதாரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் 58 வயதில் முனைவர் பட்டம் பெற்றார். கடந்தாண்டு முதன்மை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தேசியக் கல்விக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் இவர்.
"முன்னாள் மாணவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் விடுப்பது மனதை நெகிழச் செய்கிறது. தமிழ்மொழியை வாழும்மொழியாகப் பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார் 63 வயது முனைவர் தமிழரசி.
21ஆம் நூற்றாண்டு மாணவர்களைக் கையாள, பன்முகத் திறன்களைக் கொண்ட ஆசிரியர்களாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்திய முனைவர் தமிழரசி, அத்திறன்களைப் பெறுவதில் எதிர்கால ஆசிரியர்கள் முனைப்புக் காட்ட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
நல்லாசிரியர் விருது 2020/2021 வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பெருமைக்குரியோர்