கட்டுமானத் தளம் ஒன்றில் இருந்த சிமேண்ட் வாகனத்தின் அடியில் 37 வயது ஆடவர் ஒருவர் சிக்கிக்கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
பிடோக் ‘ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டரங்கம் இருக்கும் எண் 1 பிடோக் நார்த் ஸ்ட்ரீட் 2ல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) மாலை 5.55 அளவில் உதவிக்கு அழைப்பு வந்தது.
குடிமைத் தற்காப்புப் படையினர் சாதனங்களைப் பயன்படுத்தி அந்த ஆடவரை மீட்டனர். ஆனால், சம்பவ இடத்திலேயே அந்த ஊழியர் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் கூறினர்
சுமார் எட்டு போலிஸ் வாகனங்கள் அந்த வட்டரத்தில் காணப்பட்டன.
மனிதவள அமைச்சு புலனாய்வாளர்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.
கவனக்குறைவினால் மரணத்தை ஏற்படுத்திய காரணத்துக்கு போலிசார் 26 வயது ஆடவர் ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உயிரிழந்தவர் இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர் என்றும் கட்டுமானத் தளத்தின் வாயிலுக்கு அருகே போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக அவர் பணியில் இருந்தார் என்றும் மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.