வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் புதிதாகக் கட்டப்படும் தங்குவிடுதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தரநிலையை மனிதவள அமைச்சு செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தது.
இதையடுத்து, சிங்கப்பூர் தங்குவிடுதி நடத்துநர்களும் முதலாளிகளும் உயரவிருக்கும் செலவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
சிறிய தங்குவிடுதிகளில் இம்மாற்றங்கள் செய்வதை வரவேற்றபோதும் அவற்றால் எந்த குறிப்பிடத்தக்க மேம்பாட்டும் இருக்காது என வெளிநாட்டு ஊழியர் குழுக்கள் கூறின.
‘பிபிடி’ எனப்படும் குறிப்பிட்டக் காரணங்களுக்காகக் கட்டப்படும் விடுதிகளில் முதல் இரண்டு விடுதிகள் அரசாங்கத்தால் கட்டப்படவிருந்தாலும் அவ்விடுதிகளை நடத்தவும் வாடகைக்கு விடவும் தேவைப்படும் கூடுதல் செலவுகளை நடத்துநர்கள் ஏற்க வேண்டும்.
உயரும் செலவுகளை நடத்துநர்கள், முதலாளிகள் அரசாங்கம், பயனீட்டாளர்கள் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எட்டு தங்குவிடுதிகளை நடத்தும் ‘செஞ்சூரியன் கார்ப்பரேஷன்’ நிறுவனம் கூறியது.
ஆயினும், செலவுகள் உயர்ந்தாலும் தரமான தங்குவிடுதிகளுக்கு அதிக தேவை இருக்கிறது என அதன் தலைமை நிர்வாகி கொங் சி மின் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளை அறிந்து தற்போதுள்ள தங்குவிடுதிகளில் மாற்றங்களைச் செய்ய சிங்கப்பூர் தங்குவிடுதி சங்கம் ஆய்வுகளை மேற்கொள்ளும். ‘ஆர்டி’ குழுமத்தின் இயக்குநரான திரு யுஜீன் ஆவ், ஒவ்வோர் அறையிலும் கழிப்பறையைக் கட்டுவது சவாலாக அமையும் என்றார்.
ஒரு கழிப்பறையைக் கட்டுவதற்கே சுமார் $30,000 செலவாகும் என்று அவர் கூறினார்.
எடுத்துக்காட்டாக, 20லிருந்து 30 அறைகள் வரை எனப் பார்த்தால், சிறிய தங்குவிடுதி நடத்துநர்களுக்கு இச்செலவைச் சமாளிக்க சிரமம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிதியுதவித் திட்டங்கள் குறித்து ஏதேனும் அறிவிப்பு வந்தால் உடனே பணிகளைத் தொடங்க தாம் திட்டமிடுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
‘கொரி ஹோல்டிங்ஸ்’ கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹூய் யூ கோ, தமது ஊழியர்களுக்காக கூடுதல் கட்டணம் செலுத்துவதில் தமக்கு எந்தச் சிரமமிம் இல்லை என்றார். ஆனால், கட்டண உயர்வு கட்டுப்படியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போது விடுதிகளில் வசிக்கும் தமது 170 ஊழியர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் மாதம் $350 கட்டணம் செலுத்துகிறார். அது $400ஆக உயர்ந்தால் எந்தச் சிரமமும் இல்லை என்றார் அவர்.