தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை மாணவர்கள் வீட்டிலேயே கல்வி கற்கும் முறையை நடைமுறைப்படுத்தும்.
கொவிட்-19 அதிகரித்து வருவதே இதற்கான காரணம் என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. தொடக்கப்பள்ளி இறுதித்தேர்வு அடுத்த மாதம் 6ஆம் தேதிதான் முடிவடைகிறது.
தேசிய பாடத்திட்டத்தைப் போதிக்கும் சிறப்புக் கல்வி பள்ளிக்கூடங்களிலும் இந்த ஏற்பாடு நடப்புக்கு வரும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியில் இன்னமும் தகுதி பெறாமல் இருக்கும் சிறார்களை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்க இந்த ஏற்பாடு உதவும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பள்ளிக்கூடங்களில் தொற்று பரவுவதைக் கூடுமானவரை தடுக்கவும் தேர்வின்போது தனிமை உத்தரவின்கீழ் அல்லது விடுப்பின்கீழ் வைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என்று அமைச்சு தெரிவித்தது.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகள் இந்த ஆண்டு செப்டம்பர் 30ல் தொடங்கி அக்டோபர் 6ல் முடிவடைகின்றன.
இதனிடையே, "சவால்மிக்க சூழலில் நம் மாணவர்கள் தேசிய தேர்வை எழுதுகிறார்கள். அவர்களுக்குக் கூடுமான வரை ஆதரவு அளித்து அவர்களைப் பாதுகாக்க நாம் அனைவரும் நம் பங்கை ஆற்றுவோம்," என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
வீட்டிலேயே மாணவர்கள் பாடவகுப்புகளில் கலந்துகொள்ளும் முறை நடப்பில் இருக்கும் காலத்தில் கூடுதல் ஆதரவு தேவைப்படுவோர் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லலாம். வீட்டிலிருந்து வேலை பார்க்க முடியாத அல்லது மாற்றுப் பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள இயலாத பெற்றோர் பள்ளிக்கூடங்களை நாடலாம்.
கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளும் பாலர்பள்ளி பராமரிப்புச் சேவை மற்றும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் வழக்கமாகச் செயல்படும். வீட்டிலேயே படிக்கும் காலத் தில் விரைவுப் பரிசோதனை செய்துகொள்ளும்படி மாணவர்களை அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது.
மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து சுகாதாரமான, துப்புரவுமிக்க பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வரவேண்டும் என்று அமைச்சு வலியுறுத்திக் கூறியது.
பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு சமூகப் பொறுப்புடன் அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த அமைச்சு, தேவை ஏற்படும்போது பள்ளிக்கூடங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் நடவடிக்கைகளையும் அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றது.