சிங்கப்பூர் அடகுக்கடைக்காரர்கள் சங்கம் $537,500 திரட்டி அதை சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு நன்கொடையாக அளித்து உள்ளது.
அந்தச் சங்கம் தன்னுடைய 100வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக உதவித்தொகை வழங்கப்பட்டது.
சங்கத்தின் 100வது ஆண்டுவிழா சென்ற ஆண்டு கொண்டாடப்படவிருந்தது. ஆனால் கொவிட்-19 காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
புக்கிட் மேராவில் இருக்கும் கேட்வே தியேட்டரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்தத் தொகைக்கான காசோலையைப் பல்கலைக்கழகத்தின் தலைவர் சோங் தாவ் சோங்கிடம் சங்கத்தின் தலைவர் ஹோ கியம் செங் அளித்தார்.
திரட்டப்பட்ட தொகையைப் போல் ஒன்றரை மடங்கு தொகையை அரசாங்கம் தரும் என்றும் திரு ஹொ கூறினார்.
சங்கம் நேற்றைய நிகழ்ச்சியில் புதிய சின்னத்தை வெளியிட்டது. 'நூற்றாண்டு முதல் ஆயிரமாண்டு வரை' என்ற சிங்கப்பூர் அடகுத் தொழில்- சிறப்பு நினைவு புத்தகம் ஒன்றையும் அது வெளியிட்டது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கொவிட்-19 தொற்று காலத்தின்போது அடகுக்கடைக்காரர்கள் சங்கம் முக்கியமான பணியை ஆற்றி இருக்கிறது என்று அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மின்னிலக்கமயமாக வேண்டியதன் முக்கியத்துவத்தை கொவிட்-19 தொற்றுக் காலம் எடுத்துக்காட்டி இருக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதன் தொடர்பில் இந்தச் சங்கத்தோடும் அடகுக்கடைக்காரர்களோடும் அரசாங்கம் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது என்று கூறினார்.