சிங்கப்பூரில் அன்றாடம் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்து இருக்கும் சூழலில் முதியோர் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு முதியோருக்குச் சேவையாற்றும் பல அமைப்புகள் நேரடி சந்திப்புகளைத் தவிர்த்துக்கொண்டு எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன.
'ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை' என்ற அமைப்பு தன்னுடைய மூத்த தொண்டூழியர்கள், முதியோருடன் நேரடியாக ஈடுபாடு கொள்வதை நிறுத்தி இருக்கிறது.
அதற்குப் பதிலாக தொலைவில் இருந்து அவர்கள் முதியோரைத் தொடர்புகொண்டு அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவுகிறார்கள். ஏறத்தாழ 7,600 முதியவர்களுக்குச் சேவையாற்றும் 'லையன்ஸ் பிஃபிரண்டர்ஸ்' என்ற அமைப்பு, தொலைவில் இருந்து தோழமைச் சேவைகளை வழங்கும்படி தனது தொண்டூழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
'கம்போங் காக்கிஸ்' என்ற சுயஉதவிக் குழு, தனது 10 முதிய தொண்டூழியர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. முதியவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கத்தில் மக்கள் கழகமும் தாதிமை விடுதிகளும் முதியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவி வருகின்றன.
ஐந்து தாதிமை விடுதிகளை நிர்வகித்து நடத்தும் என்டியுசி ஹெல்த் நிறுவனம், தன் பராமரிப்பில் உள்ள முதியவர்களுக்குப் புதன்கிழமை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடத் தொடங்கியது.
ரென் சி மருத்துவமனை தனது சமூக மருத்துவமனையில் உள்ள 25 முற்றிய நோயாளிகளுக்கு அடுத்த வாரம் முதல் பூஸ்டர் தடுப்பூசி போடத் தொடங்கும். அங் மோ கியோவில் உள்ள தனது விடுதியில் இருக்கும் ஏறத்தாழ 70 முதியவர்களுக்கும் அந்த இயக்கத்தை அது விரிவுபடுத்தும்.

