ஆண்டுதோறும் பாலியல் பலாத்காரம் தொடர்பிலான நூற்றுக்கணக்கான புகார்கள் குற்றப் புலனாய்வுத் துறையின் ‘எஸ்எஸ்சிபி’ எனப்படும் மோசமான பாலியல் குற்றங்களுக்கான பிரிவிடம் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
2018ஆம் ஆண்டில் மோசமான பாலியல் குற்றங்களுக்கான பிரிவு, 213 பாலியல் பலாத்கார விவகாரங்களைக் கையாண்டது. 2019இல் இந்த எண்ணிக்கை, 281ஆக அதிகரித்தது, சென்ற ஆண்டு 348ஆகப் பதிவானது. பெரும்பாலான பாலியல் பலாத்கார விவகாரங்களில், குற்றம் சுமத்தப்பட்ட ஆண்கள் பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்தவர்கள்.
மாதர் செயலாய்வுச் சங்கத்தின் பாலியல் வன்முறைக்கு ஆளானோருக்கான ஆதரவு வழங்கும் நிலையமும் கடந்த மூவாண்டுகளில் குறைந்தது 258 பாலியல் பலாத்கார மற்றும் வன்முறை விவகாரங்களைக் கையாண்டதாகத் தெரிவித்தது. பாதிக்கப்பட்டோரில் 10ல் ஏழு பேர் அதிகாரபூர்வமாகப் புகார் தர முன்வருவதில்லை என்று மாதர் செயலாய்வுச் சங்கத்தின் ஆய்வு, ஆதரவு பிரிவின் தலைவர் ஷெய்லி ஹிங்கொராணி கூறினார்.
பெண்கள் சார்ந்த விவகாரங்களைக் கையாள உதவும் ஆக்ககரமான பரிந்துரைகளைக் கொண்ட வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் எனப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருந்தார். பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பிலும் பேசியத் திரு லீ, கூடுதல் மனக் கவலைக்கு ஆளாகாத வகையில் பாதிக்கப்பட்டோர் உதவி நாடும் சூழல் இருக்கவேண்டும் என்றார். பிரச்சினையால் தங்கள் மீது பழி போடப்படலாம் அல்லது தாங்கள் அவமானப்படலாம் என்ற அச்சம் பாதிக்கப்பட்டோரிடையே உருவாகக்கூடிய நிலைமை எழக்கூடாது என்றும் அவர்கள் வேதனையை வெளியில் சொல்லமுடியாமல் ஆதரவின்றி தவிக்கக்கூடாது என்றும் அவர் சுட்டினார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் மோசமான பாலியல் குற்றங்களுக்கான பிரிவின் விசாரணை அதிகாரிகள் பாலியல் பலாத்கார விவகாரங்களை கையாள்வர்.
பாதிக்கப்பட்டோர் மனத்தளவில் அதிக வலியை எதிர்நோக்க்கூடும். அவர்களைப் புண்படுத்தாத வகையில் விவகாரத்தின் தகவல்களைச் சேகரிக்கும் உத்திகள் சிறப்புப் பயிற்சிகள் வாயிலாக விசாரணை அதிகாரிகளுக்குக் கற்றுத் தரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்படும்போதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு அளிக்க ‘விசிஓ’ எனப்படும் பாதிக்கப்பட்டவர் நலன் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
இவர்கள் சமூக சேவை, மனநலம் போன்ற துறைகளில் அனுபவம் வாயந்த தொண்டூழியர்கள். தற்போது இத்தகைய 113 அதிகாரிகள் பணியில் உள்ளனர்.