ஏற்கெனவே தாமதடைந்த சாங்கி 'வையடக்ட்' எனப்படும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய கூடுதல் காலம் ஆகும். கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் தாமதடைந்துள்ள பல கட்டுமானத் திட்டங்களில் இதுவும் அடங்கும்.
தெம்பனிஸ் விரைவுச்சாலை, தீவு விரைவுச்சாலை ஆகியவற்றில் அமையும் சாங்கி மேம்பாலக் கட்டுமானத் திட்டம், கொவிட்-19 சூழலால் எழுந்துள்ள மனிதவளப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது. இனி அடுத்த ஆண்டு பிற்பாதிக்குள் பாலம் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலில் 2015ஆம் ஆண்டில் உள்ளுர் கட்டுமான நிறுவனமான 'ஓகேபி ஹோல்டிங்ஸ்' ஏற்றுக்கொண்டது. அப்போது திட்டத்தின் மதிப்பு 94.6 மில்லியன் வெள்ளியாக இருந்தது. சென்ற ஆண்டு முதல் காலாண்டிற்குள் மேம்பாலத்தைக் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வடிவமைப்பில் இருந்த பிழைகள், மறைக்கப்பட்ட தவறுகள் உள்ளிட்ட காரணங்களால் அந்த விபத்து நேர்ந்தது.
அதனால் கட்டுமானப் பணிகள் தாமதடைந்தன. மேம்பாலத்தின் பகுதி இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார், 10 பேர் காயமடைந்தனர். இதற்குப் பின்னர் 'ஹுவா செங் பில்டர்' நிறுவனம் கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்தியது. அப்போது திட்டத்தின் மதிப்பு 95.6 மில்லியன் வெள்ளி. கட்டுமானப் பணிகள் 2019ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கின.
அடுத்த ஆண்டு முற்பாதியில் மேம்பாலத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவல் நிலைமை மேலும் சிக்கலாக்கியது. எல்லைக் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன, தனிமைப்படுத்தும் உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணிகள் மேலும் தாமதடைந்தன.
கட்டிமுடிக்கப்பட்டவுடன் இந்த மேம்பாலம் நெரிசலைக் குறைத்து போக்குவரத்தைச் சற்று சீர்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாங்கி பாலத் திட்டத்தைப் போல் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதை போன்ற இதர சில போக்குவரத்துத் திட்டங்களும் தாமதடைந்துள்ளன. 2024ஆம் ஆண்டில் திறக்கப்படவிருந்த தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை இனி 2025ல் திறக்கப்படும்.

